கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 903 உன் பிள்ளை ஒரு பராக்கிரமசாலியாவான்!

நியா: 6: 12 “கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.”

 கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றக் கர்த்தரால் உபயோகப்படுத்தப்பட்ட தெபோராள், பாராக், யாகேல் என்ற மூவரைப் பற்றி நாம் படித்தோம். தெபோராளின் வாழ்க்கையிலிருந்து அநேக காரியங்களைக் கற்றுக்கொண்டோம்.

ராஜாவின் மலர்களில் நாம் பெண்களைப்பற்றி மாத்திரம் படிப்பதில்லை, ஆபிரகாம், லோத்து, யாக்கோபு, மோசே போன்ற அநேக ஆண்களின் சரித்திரத்தையும் நாம் அலசிப்பார்த்திருக்கிறோம் அல்லவா!

இப்பொழுது நியாதிபதிகள் 6 ம் அதிகாரத்தில் நாம் கிதியோனின் வாழ்க்கைக்கு கடந்து வருவோம்.  நாம் படிக்கும்போது கிதியோன் எப்படியொரு சிக்கலான மனிதன் என்று தெரிந்து கொள்ளப்போகிறோம்.

நியாதிபதிகளின் புத்தகம்  ஆறாவது அதிகாரம் “பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தார்கள் “என்று ஆரம்பிக்கிறது.  எவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர்கள் சிசெராவின் கொடுமையையும், ராஜா யாபீனின் 900 இருப்பு ரதங்களையும் மறந்து போனார்கள். அதை மட்டுமா மறந்தார்கள்! தேவனுடைய பலத்த கரம் அவர்களை விடுவித்ததையும், தெபோராளும், பாராக்கும் , யாகேலும், கர்த்தரால் உபயோகப்படுத்தப்பட்டதையும் கூட மறந்தார்கள்!

இப்பொழுது மறுபடியும் அவர்கள் வதைக்கப்பட்டார்கள். இந்தமுறை கானானியரால் அல்ல, மீதியானியரால் கஷ்டத்துக்குள்ளானார்கள். நியாதி: 6: 2 ல் வேதம் கூறுகிறது,  மீதியானியரின் கை, இஸ்ரவேலின் மேல் பலத்ததால், அவர்கள் தங்களுக்கு, மலைகளிலுள்ள கெபிகளையும், குகைகளையும், அரணான ஸ்தலங்களையும்,  அடைக்கலங்களாக்கிக் கொண்டார்கள் என்று. பயத்தினால் அவர்கள் ஒளிந்து வாழ்ந்தனர். தங்களுக்கு இனி விடுதலையே இல்லை என்று நம்பிக்கையிழந்து காணப்பட்டனர்.

ஆனால் தேவனாகிய கர்த்தரோ அவர்களை கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருந்தது. தம்முடைய மக்களை விடுவிக்கத் திறமைசாலியான ஒரு மனிதனைத் தேடினார்.

நியா: 6: 11 கூறுகிறது, கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்கு சமீபமாக அதைப் போரடித்தான் என்று.  தேவனாகிய கர்த்தர் அவனிடம் தம்முடைய தூதரை அனுப்பி  “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.”

ஒரு நிமிடம்! நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது!

உயிருக்கு பயந்து மலைகளிலும் கெபிகளிலும் வாழ்ந்த கிதியோனைப் பார்த்து, கோதுமையை நல்ல வெளிச்சத்தில் போரடிக்க பயந்து, ஆலையின் மறைவில் போரடித்த கிதியோனைப் பார்த்து, கர்த்தர் பராக்கிரமசாலியே என்று அழைக்கிறார். தொடை நடுங்கிக் கொண்டு கோதுமையை போரடித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து, கர்த்தர், வீர தீரனே! தைரியசாலியே!   வலிமையானவனே! துணிவுள்ளவனே!  என்று அழைப்பதைப் போல் உள்ளது அல்லவா!  ஆம்! நான் உபயோகப்படுத்தின இத்தனை வார்த்தைகளும் பராக்கிரமசாலி என்ற ஒரே வார்த்தையில் அடங்கும்!

நாம் அருகதையற்றவன் என்று நினைப்பவரிடம் கர்த்தர் திறமையைப் பார்க்கிறார். நாம் பயந்தவன் என்று நகைப்பவரிடம் கர்த்தர் தைரியத்தைப் பார்க்கிறார். அல்லேலூயா!

ஒருமுறை  10 ம் வகுப்புக்கான ரிசல்ட் வந்தது. நான் ஓரளவுக்கு நல்ல மார்க்குகள் வாங்கிய இரண்டு பிள்ளைகளிடம் பேசினேன். அவர்கள் இருவருமே என்னிடம், ‘ அம்மாவுக்குதான் ஆண்ட்டி நான் வாங்கியிருக்கிற மார்க்குகள் மேல் திருப்தியில்லை. என்னிடம் பேசகூட மாட்டேன் என்கிறார்கள்’ என்று வருத்தப்பட்டனர்.

அன்பு சகோதரனே! சகோதரியே! உன் பிள்ளைகளிடம் நீ காணாத ஒன்றைக் கர்த்தர் காண்கிறார். உன் பிள்ளைகள் உனக்கு படிப்பில் பலவீனமாய்த் தெரியலாம்! கர்த்தரோ அவனில் ஒரு விஞ்ஞானியைப் பார்க்கிறார்! ஒரு  ஐ.ஏ.ஸ் அதிகாரியைப் பார்க்கிறார். ஒரு டாக்டரைப் பார்க்கிறார்! ஒரு சிறந்த ஊழியக்காரரைப் பார்க்கிறார்.

எக்கேடோ கெட்டுப்போ, உருப்படவே மாட்டாய் , என்று பிள்ளைகளைத் திட்டாதீர்கள்! எந்த சூழ்நிலையிலும், ஏன் அவனது 10 ம் வகுப்பு அல்லது 12 ம் வகுப்பு மார்க்குகள் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும் கூட, கர்த்தர் அவ்ன் வாழ்க்கையில் பெரியதொரு தரிசனத்தை வைத்திருக்கிறார் என்பதை உணர்ந்து, அன்பு என்ற நீரைப் பாய்ச்சும்போது, ஒருநாள் அவன் மலர்ந்து கனி கொடுப்பான்.

இன்று திறமையற்று பலவீனமாய் இருக்கும் உன் பிள்ளையை ஒரு பராக்கிரமசாலியாகப் பார்! ஏனெனில் கர்த்தரின் கண்களுக்கு அவன் ஒரு திறமைசாலிதான்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment