சங்கீ: 31: 3 என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும்.
நாம் தொடர்ந்து யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றிப் படிக்கும் முன்னர், இன்று சற்று நேரம் நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்தித்து பார்க்கலாம் என்று யோசித்தேன்.
ஒருமுறை மார்டின் லூதருடைய மனைவி கெத்தரின் ( Catherine )அம்மையார் எழுதிய சில வரிகளைப் படித்தேன். அவர்கள் “ஆண்டவரே என்னுடைய எல்லா துயரங்களுக்காகவும் நன்றி, அவைகள் மூலமாய் நான் உம்முடைய மகிமையை காண உதவி செய்தீர், என்னை ஒரு நாளும் கைவிடவும் இல்லை, மறக்கவும் இல்லை ” என்று எழுதியிருந்தார்கள். தன்னுடைய ஓட்டத்தை ஓடி முடிக்கும் தருவாயில் ஒருவர் கொடுக்கும் மகிமையான சாட்சி அது!
எல்லாத் துயரங்களுக்காகவும் நன்றி! ‘எல்லா’ என்ற வார்த்தை உங்கள் வாழ்க்கையில் எதைக் குறிக்கிறது? உங்களில் சிலர் போய்க்கொண்டிருக்கும் கடுமையான கானகப்பாதை எனக்கு தெரியும். இந்த கொரொனா என்ற வாதையினால் 200 ஊழியர்களுக்கு மேல் இந்த உலகத்தை விட்டு கடந்து போய்விட்டதாகக் கேள்விப்பட்டேன்! எத்தனை குடும்பங்கள் கண்ணீரிலும் துக்கத்திலும் உள்ளன என்பதை நம்மால் கணக்கிட முடியாது!
யோசேப்பின் சரித்திரம் எல்லாத் தலைமுறையினருக்கும் சவால் அளிக்கும் ஒன்று! யோசேப்பைப் போல நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் உண்டா? ஏன் எனக்கு இந்த இடி மேல் இடி என்றாவது இடிந்து போயிருக்கிறீர்களா? நானும்கூட இடிந்து போன நாட்கள் உண்டு! ஆனால் என்னுடைய வாழ்க்கை என்னும் படகு புயலில் அலைக்கழிக்கப் பட்டபோது, அது கவிழ்ந்து போகவுமில்லை! நான் மூழ்கவுமில்லை! என்னுடைய கப்பலின் மாலுமியாக தேவனாகியக் கர்த்தர் என்னோடிருந்தார்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
என்னுடைய வாழ்க்கைப் புயல் என்னைத் தாக்கும் முன்னரே , என் தேவனாகியக் கர்த்தர் எனக்காக வழியை ஆயத்தம் பண்ணிக்கொண்டிருந்தார். நான் அழைக்கும் முன்னரே என் ஜெபத்துக்கு பதிலளிக்க தயாராக இருந்தார். ‘எல்லாவற்றையும்’ என்னுடைய நன்மைக்காக நடந்தவைகளாய் மாற்றியமைத்துக் கொண்டிருந்தார்.
ஒருவேளை நீ இன்று சோர்ந்து போன நிலையில் காணப்படலாம்! எதிர்காலம் நம்பிக்கையில்லாமல் இருளடைந்து இருக்கலாம்! அப்படியானால் ‘ராஜாவின் மலர்கள்’ உனக்காகத்தான் எழுதப்படுகிறது. இன்று கர்த்தர் இந்த இடத்தில் யோசேப்பின் சரித்திரத்தைத் தொடர விடாமல் இந்த வார்த்தைகளை எழுதும்படி கட்டளையிட்டதும் உனக்காகத்தான்!
வேதனைகளாலும், பிரச்சினைகளாலும் சோர்ந்து போகிறாயா? யாக்கோபுக்கு அவைகள் இருந்தன! யோசேப்புக்கு இருந்தன! கர்த்தர் அவர்களோடு இருந்தார்! கர்த்தர் அவர்களோடு இருந்ததற்கு அடையாளம் கூட மிகக் குறைவாக காணப்பட்ட நேரத்திலும், கர்த்தர் அவர்களுக்காக ‘யாவற்றையும்’ செய்து கொண்டு இருந்தார். சரியான சமயத்தில், சரியான முறையில் அவருடைய உதவி அவர்களுக்கு எட்டியது!
நாம் கடந்த காலத்தை சற்று திரும்பி பார்ப்போம்! தேவனின் அற்புத செயல்களை நினைவு கூறுவோம்! அவர் நம்மை வழி நடத்திய அற்புதம், நம்முடைய எதிர் காலத்தை தைரியமாய் சந்திக்க நமக்கு பெலன் தரும்.
தைரியமாயிருங்கள்! உங்களுடைய கானகப்பாதையை நீங்கள் கடந்து வரும்போது ஒருநாள் ஆண்டவரே என்னுடைய எல்லாத் துக்கங்கள் துயரங்களுக்காகவும் நன்றி, அவைகள் மூலமாய் நான் உம்மை தரிசிக்க முடிந்தது என்று சாட்சி சொல்வீர்கள்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து http://www.rajavinmalargal.com என்ற தளத்துக்கு சென்று ‘Follow’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.
