கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1042 கனவு நனவாகும் காலம் வெகுதூரமில்லை!

ஆதி:50: 20 நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ இப்படி நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு அதை நன்மையாக முடியப்பண்ணினார்.

யோசேப்பு எகிப்துக்கு  அதிகாரியான பின்னர், கர்த்தர் பார்வோனுக்கு சொப்பனத்தின் மூலமாய் உரைத்தது போலவே மிகப் பெரிய பஞ்சம் உண்டாயிற்று. கானான் தேசமும், எகிப்தும்தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்து போயிற்று. கானானிலே யாக்கோபும், அவன் குடும்பத்தாரும் பஞ்சத்தினாலே வாட ஆரம்பித்தனர். கானானில் மட்டும் அல்ல, எங்குமே உணவுப் பொருள் இல்லாததால், யாக்கோபு தன் குடும்பம் பஞ்சத்தினால் அழிந்து விடுமோ என்று கலங்க ஆரம்பித்தான்.

ஒருநாள் ஓர் நற்செய்தி அவன் காதுகளுக்கு வந்தது. அது என்னவெனில் எகிப்திலெ தானியம் உண்டு என்ற செய்தி! ஆதி: 42: 2,3,  கூறுகிறது, யாக்கோபு, எகிப்திலே தானியம் உண்டென்று அறிந்து தன் குமாரரை அழைத்து, நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறது என்ன?  நாம் சாகாமல் உயிரோடு  இருக்கும்படி, நீங்கள் அவ்விடத்துக்குப் போய் தானியம் கொள்ளுங்கள் என்றான்.

எகிப்திலே தானியம் உண்டென்று அறிந்தும் யாக்கோபின் புத்திரர் ஏன் தாமதித்தனர்? ஒருவேளை அன்று ஒருநாள், அவர்கள் சகோதரனாகிய  யோசேப்பை எகிப்தியருக்கு விற்றுப் போட்டு, யாக்கோபிடம் ஒரு மிருகம் அவனை பீறி விட்டது என்று பொய் சொன்ன குற்ற உணர்வு அவர்கள் நெஞ்சை விட்டு அகலவில்லை போலும்.   

  ஆதி:42: 3, 4 கூறுகிறது, யோக்கோபின் பத்து குமாரர், தானியம் வாங்க எகிப்தை நோக்கி சென்றனர். ஆனால் யாக்கோபு தன் இளைய குமாரன் பென்யமீனை, அவர்களோடு அனுப்பவில்லை. யோசேப்புக்கு நடந்த விபரீதம் தன் அன்பு மனைவி ராகேல் பெற்ற பென்யமீனுக்கு வந்து விடக் கூடாது என்ற எண்ணம். ஒருவேளை, காலம் காலமாக யாக்கோபு, தன் செல்லக் குமாரன் யோசேப்புக்கு நடந்த விபரீதம் தன்னால் விளைந்தது தான் என்று தன்னையே குற்றம் சாட்டிக்கொண்டிருந்திருப்பான். அவன் பென்யமீனுக்கும் ஏதோ ‘மோசம்’ வரக்கூடும் என்று நினைத்தது, ஒருவேளை, யோசேப்பின் மறைவு, அவனுடைய மற்ற குமாரரின் மோசடி செயலால் நேர்ந்தது என்று சற்று உணர்ந்துகூட இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

ஒருகணம் என்னோடு யோசியுங்கள்!

 யாக்கோபின் புத்திரர் எகிப்து வந்தடைந்தவுடன் அவர்கள் புதிதான நாட்டில் நின்று கொண்டு போவோர், வருவோரை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள் அல்லவா?  விசேஷமாக அங்கிருந்த அடிமைகளை, வேலைக்காரர்களை உற்றுப் பார்த்திருப்பார்கள்! ஒருவேளை இவன் யோசேப்பாக இருப்பானோ? இவனைப் பார் யோசேப்பை போல இல்லை! என்ற எண்ணம் ஒவ்வொரு வேலைக்காரர்களைப் பார்க்கும்போதும் வந்திருக்கும். ஏனெனில், யோசேப்பை அடிமையாக அல்லவா விற்றுப் போட்டார்கள்!

திடீரென்று அவர்களை அத்தேசத்தார், அதிபதியான யோசேப்பின் முன்பு கொண்டு சென்றனர். அவர்கள் பத்து பேரும், யோசேப்பை தங்கள் சகோதரன் என்று அறியாது, அவன் முன்னால் முகங்குப்புற விழுந்து வணங்கினர்.

ஆகா! எப்படிப்பட்டக் காட்சி இது! அன்று ஒருநாள் யோசேப்பு கண்ட சொப்பனம் இது! இதனால்தானேஅவன் சகோதரர் அவனை மேலும் வெறுத்தனர்! இன்றோ யோசேப்பின் சொப்பனம் நிறைவேறியது! அவன் சகோதரர் அவனை அறியவில்லை! ஆனால் யோசேப்பு அவர்களை அறிந்தான்! அவன் மனதில் எனென்ன எண்ணங்கள் ஓடியிருக்கும்! அந்த சொப்பனத்தை நிச்சயமாக நினைவுகூர்ந்திருப்பான் அல்லவா? அவனுடைய நீண்ட கால கனவு நனவாயிற்று!

அவர்களுடைய மோசடி புத்தி இன்னும் இருக்கிறதா என்று அறிந்து கொள்ள, அவர்களை வேவுகாரர் என்று, மூன்று நாள் காவலில் வைத்து, உங்களில் ஒருவன் சென்று உங்கள் இளைய சகோதரனை இங்கு கொண்டு வந்தால்தான் உங்களை நம்புவேன் என்று கூறுகிறான்! அப்பொழுது அவர்கள் நாம் நம் சகோதரனுக்கு செய்த துரோகம் நம் மேல் சுமந்தது ,என்று கடந்த காலத்தின் பாவத்தை நினைத்து மனம் நொந்துப் போயினர்!

நாம் தொடர்ந்து வாசிக்கும்போது, அவர்கள் சிமியோனை விட்டு விட்டு சென்று பென்யமீனோடு திரும்புகிறார்கள். தன் தம்பி பென்யமீனைப் பார்த்ததும் யோசேப்பு இருக்கையை விட்டு சென்று அழுகிறான், பின்னர் திரும்பிவந்து, தான் அவர்கள் சகோதரன் யோசேப்புதான் என்று வெளிப்படுத்தி , தாங்கள் செய்த துரோகத்துக்கு தங்களைப் பழிவாங்கிவிடுவானோ என்று பயத்தில் நின்ற சகோதரைப் பார்த்து, “நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ அதை நன்மையாக முடியப்பண்ணினார்” என்று தெளிவாக தேவனை மகிமைப் படுத்தினான்!

எத்தனை அருமையான மன்னிப்பின் வார்த்தைகள்! நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னை சிலுவையில் அறைந்தவர்களைப் பார்த்து ‘பிதாவே இவர்களுக்கு மன்னியும்’ என்று கூறியது போல!

தீமைக்கு பதிலாக நன்மை, வெறுப்புக்கு பதிலாக அன்பு, பழிக்கு பதிலாக மன்னிப்பு, இவை யோசேப்பின் நற்குணங்கள்! இவையே அவன் தேவனுடைய பிள்ளை என்பதற்கு நற்சாட்சி!

இந்த பகுதியை வாசிக்கும்போது, “ நம்முடைய பரம பிதா நமக்கு பெரிய ஆசீர்வாதத்தை கொடுக்கத் திட்டமிட்டாலொழிய, இருக்கிற ஆசீர்வாதத்தை எடுக்க மாட்டார்” என்று ஜார்ஜ் முல்லர் அவர்கள் கூறியது ஞாபகத்துக்கு வந்தது.

யோசேப்பிடமிருந்து ஆசீர்வாதங்கள் பிடுங்கப்பட்டன என்று எல்லோரும் நினைக்கும் அளவுக்கு அவன் வேதனையான பாதையில் சென்றான் …. ஆனால் ….. கர்த்தரோ அவனுக்காக மிகப் பெரிய ஆசீர்வாதத்தை வைத்து , அதை நோக்கி அவனை வழிநடத்தினார்.

இன்று நீ ஒருவேளை கடினமானப் பாதையைக் கடந்து கொண்டிருக்கலாம்! ஒருவேளை மனந்தளர்ந்து போய் ஏன் என் வாழ்க்கையில் ஒரு ஆசீர்வாதமும் இல்லை என்று சோர்ந்து போயிருக்கலாம்! இன்று எல்லாமே உன்னைவிட்டு எடுக்கப்பட்டு போனதாகத் தோன்றினாலும் நீ எதிர்பாராத அளவுக்கு ஒரு பெரிய ஆசீர்வாதம் உனக்காகக் காத்திருக்கிறது! உன்னுடைய நீண்ட கால கனவுகள் நிச்சயமாக நனவாகும்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்  

http://www.rajavinmalargal.com

Leave a comment