கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1057 நல்ல குடும்பமே ஒருவனின் வெற்றிக்குப் பின்னணி!

யாத்தி: 18: 5 மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயின் குமாரரோடும், அவன் மனைவியோடுங்கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்திரத்துக்கு வந்து….”

நாம் கடந்த நாட்களில் மோசேயுடைய வாழ்க்கையில் முக்கிய இடம் வகுத்த பெண்களைப் பற்றி அறிந்தோம். அவன் தாய் யோகெபெத், சகோதரி மிரியம், அவனை பரிவுடன் வளர்த்து ராஜ குமாரனாக்கிய பார்வோன் குமாரத்தி, அவன் மனைவி சிப்போராள் என்ற பல பெண்கள் அவன் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மிகப்பெரிய தலைவனாவதற்கு ஒருமுக்கிய காரணம் வகுத்தனர்.

அவன் மனைவியாகிய சிப்போராள் ஒரு அருமையான பெண் மாத்திரமல்ல,ஒரு நல்ல குடும்பத்திலிருந்து வந்தவளும் கூட. அவளும் அவள் தகப்பன் எத்திரோவும் மோசேயின் வெற்றிக்கு பின்னால் துணை நின்றவர்கள்!

சற்று நாம் பின்னோக்கி பார்ப்போம்.

மோசே எகிப்தில் பார்வோன் குமாரத்தியின் வளர்ப்பு மகனாய் இருந்தபோது எகிப்தியன் ஒருவன் ஒரு எபிரேயனை சித்திரவதை செய்வதைப் பார்த்து, அவன் மேல் கோபப்பட்டு, யாரும் தன்னை கவனிக்கவில்லை என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு , அவனை கொலை செய்தான். நாம் மறைவிடத்தில் செய்யும் தவறையும் பார்க்கிற தேவன், அவன் சட்டத்தை கையில் எடுத்து எகிப்தியனை தண்டித்ததை நிச்சயமாக விரும்பவில்லை. அதனால் அவன் எகிப்தை விட்டு ஓடி, மீதியான் தேசத்தில் தஞ்சம் புக வேண்டியிருந்தது. கர்த்தர் அவனைக் கைவிடாமல், மீதியான் தேசத்தில், எத்திரோவின்  குடும்பத்தில் அவனுக்கு அன்பையும், அரவணைப்பையும், ஒரு வேலையையும், ஒரு மனைவியையும், பிள்ளைகளையும் அமைத்துக் கொடுத்தார்.

நம்மை சிப்போராளின் இடத்தில் வைத்து கொஞ்சம் சந்தித்து பாருங்கள்! நாம் எகிப்திய ராஜ குமாரன் என்று நினைத்தவன், திடீரென்று நம்மிடத்தில் நான் எகிப்தியன் இல்லை, கொலை செய்து விட்டு தப்பி ஓடிவந்த எபிரேயன் என்றால் நமக்கு எப்படியிருக்கும்?

அதுமட்டுமல்ல, இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பன் ஆன பின்னால் ஒருநாள், நான் எரியும் முள் செடியில் எங்கள் தேவனாகியக் கர்த்தரைப் பார்த்தேன் அவர் என்னை எகிப்த்துக்கு திரும்பிப் போய் பார்வோனிடமிருந்து என் ஜனத்தை மீட்க சொல்கிறார், நாம் புறப்பட்டு போகலாம் என்றால், இவனுக்கு என்ன ஆயிற்று? ஏதாவது குடித்து விட்டு புலம்புகிறானா என்று தானே நினைப்போம்.

இந்த சம்பவங்களை நாம் வேதத்தில் வாசிக்கும்போது, அதில் இடம் பெற்றவர்களும் நம்மைப் போல சாதாரண மக்கள்தான், இந்த சம்பவம் நடந்த போது அவர்களும் இதைக்குறித்து முடிவு எடுக்கத் திணறித்தான் இருந்திருப்பார்கள் என்ற எண்ணம்  நமக்கு உதிப்பதில்லை! நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் என்னுடைய பிள்ளைகளோடு, எகித்துக்குள் போய் பார்வோனால் தேடப்படுகிற குடும்பம் என்ற முத்திரை குத்தப்பட நிச்சயமாக சம்மதித்திருக்க மாட்டேன்.

யாத்தி4: 18 ல் மோசே தன் மாமனாகிய எத்திரோவிடம் போய் , உண்மையான காரணத்தை சொல்லாமல், தன் சகோதரரை எகிப்தில் பார்க்க போவதாக பொய் சொல்லி விடை பெறுகிறதைப் பார்க்கிறோம். எத்திரோவும் அவனை, உண்மையறியாமல் சமாதானத்தோடே போ என்று அனுப்பி வைக்கிறான்.

பின்னர் என்ன நடந்தது? மோசே தன் மனைவி, பிள்ளைகளோடு எகிப்துக்கு போகும் வழியில் கர்த்தர் இடைப்பட்டு அவனுடைய கீழ்ப்படியாமையினால் அவனைக் கொல்லப் பார்த்தார். சிப்போராளின் கீழ்ப்படிதல் அவனைக் காப்பாற்றியது.

இந்த பயங்கர சம்பவத்துக்கு பின் நான் அங்கு இருந்திருந்தால், ‘மோசே நீர் தேவனுக்கு கீழ்ப்படிவதைக் குறித்து எனக்கு பெருமையாய் இருந்தாலும், எகிப்தில் நமக்கு எனக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. ஒருவேளை நாம் சிறைக் கைதிகளாகலாம் அல்லது அடிமைகளாகலாம். நானும் பிள்ளைகளும் என்னுடைய தகப்பனிடம் திரும்பிப் போகிறோம், நீர் நாங்கள் வரலாம் என்று சொல்லி அனுப்பும்போது வருகிறோம்’ என்றுதான் கூறியிருப்பேன்.

அங்கும் அப்படித்தான் நடந்தது என்று நினைக்கிறேன். குடும்ப நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவாகத்தான் அது இருந்திருக்கும். அதுமட்டுமல்ல, மோசேக்கு கர்த்தர் கொடுத்த பெரிய பொறுப்பு அவனுடைய முழு நேரத்தையும், பெலத்தையும் கொடுக்க வேண்டியது என்று அந்த குடும்பம் உணர்ந்து, சிப்போராளும், பிள்ளைகளும் மீதியானுக்கு திரும்பிப்போய் எத்திரோவுடன் தங்கினர்.

அதனால் தான் இன்றைய வேத பகுதியில் பார்க்கிறோம், கர்த்தர் செய்த அற்புதமான வழிநடத்துதலைப் பற்றி கேள்விப்பட்ட  எத்திரோ, சிப்போராளோடும், மோசேயின் இரண்டு குமாரரோடும் மோசே இருந்த பர்வதத்துக்கு வந்து சேர்ந்தான் என்று.

யாத்தி:18 ல் அந்த குடும்பம் ஒன்று சேர்ந்த போது இருந்த மகிழ்ச்சியைப் பற்றி கூறுகிறது. மோசே கூடாரத்தை விட்டு வெளியே சென்று தன் மாமனாரை முத்தம் செய்து வரவேற்கிறான். பின்னர் அவனை கூடாரத்துக்குள் அழைத்துவந்து கர்த்தர் செய்த எல்லா அதிசயங்களையும் பற்றி கூருகிறான். அந்த இடத்திலேயே எத்திரோ , ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய கர்த்தரை  விசுவாசித்தான் என்று பார்க்கிறோம்.

இதைப் பற்றி நாம் தொடர்ந்து நாளை படிக்குமுன், சிப்போராளின் குடும்பத்தினர் மோசேயிடம் காட்டிய பரிவும், அன்பும், அக்கறையும், பின்னர் அவனைப் புரிந்து கொண்டு தேவனுடைய காரியமாய் அனுப்பி வைத்ததும் இன்று நம் மனதில் தங்குகிறதல்லவா?

ஒருவனின் வெற்றிக்கு பின்னணியே அவன் குடும்பம் தான் இல்லையா? மோசேயின் குடும்பம் அவனுடைய அழைப்பையும், ஊழியத்தையும் மனதில் கொண்டு அநேக காரியங்களை அவனுக்காக விட்டுக் கொடுத்தனர்!

இன்று நாம் நம் குடும்பத்துக்காக என்ன செய்கிறோம்? எதை விட்டுக் கொடுக்கிறோம்? வேலைக்கு போகும் மனைவிக்காக நீங்கள் செய்யும் தியாகம் என்ன? உன்னை நேசிக்கும் கணவனின் குடும்பத்துக்காக நீ என்ன செய்ய மனதாயிருக்கிறாய்? உன் பிள்ளைகளின் நலனுக்காக என்ன செய்கிறாய்! சிந்தித்து ஜெபி! கர்த்தர் தாமே உங்கள் குடும்பங்களை ஆசீர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

Leave a comment