கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1209 இருளை ஊடுருவி வரும் ஒளிக்கதிர்கள் !

நியாதிபதிகள்: 13:24 ” பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது, கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.

நேற்று இரவு எனக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. விடியற்காலை  எங்கள் குக்கூ கடிகாரத்தில் உள்ள குருவி மூன்று முறை அடித்தவுடன் எழும்பிவிட்டேன். ஜன்னல் வழியே வெளியே சற்று நேரம் பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. இருண்ட மேகத்தைக் கிழித்துக்கொண்டு சந்திரனின் ஒளிக்கதிர்கள் வீசிக்கொண்டிருன்தன. இருண்ட வானமும், ஊடுருவி வீசிய ஒளியும் என் தேவனாகிய கர்த்தர் சகலத்தையும் தன் கரங்களில் அடக்கி ஆளுகிறார் என்பதைத் தெளிவாக நினைவூட்டின.

எத்தனை ஆறுதல்! விசேஷமாக கடினமான பாதையைக் கடந்து வரும் நமக்கு, சகலமும் கர்த்தரின் கரத்துக்குள் அடங்கியுள்ளன, அவருடைய கரத்திலிருந்து நம்மை சேர வேண்டிய ஆசீர்வாதங்கள் இருளை ஊடுருவி வரும் ஒளிக்கதிர்கள் போல நம்மை நோக்கி வருகின்றன என்ற எண்ணம் எவ்வளவு அமைதியையும் ஆறுதலையும் அளிக்கிறது.

இன்று நாம் கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிற எண்ணில்லாத பொதுவான ஆசீர்வாதங்களைப் பற்றி சிந்தியாமல், எனக்கும் உங்களுக்கும் கர்த்தர் தனிப்பட்ட முறையில் அளிக்கும் ஆசீர்வாங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

சிம்சோனின் பிறப்பைப் பார்க்கும்போது அவன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னமே கர்த்தர் அவன் வாழ்க்கையில் ஒரு திட்டம் வைத்திருந்தது போலத் தெரிகிறது. அவன் மட்டுமல்ல அவன் தாயும் தேவனுடையத் திட்டத்தில் இருந்தாள்.

சங்: 22: 9, 10 வசனங்களில் , “ நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடையபேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர்.

கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே  உமது சார்பில் விழுந்தேன். நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்.” என்பதைப் பார்க்கிறோம்.

இந்த அருமையான சங்கீதத்தில் தாவீது தேவனை நோக்கி, நீரே என்னை  கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்  என்கிறார். எடுத்தவர் என்ற வார்த்தை என்னை எபிரேய அகராதியைப் பார்க்கத் தூண்டியது. அதற்கு நான் ‘பறித்தவர்’ என்ற அர்த்தத்தையும் பார்த்தேன்.

பறித்தவர் என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ள மற்ற வசனங்களையும் பார்க்கும்போது, ஏதோ விபத்தாகவோ அல்லது தவறாகவோ நடக்கும் செயல் அல்ல என்பது தெரிந்தது. நாம் நம் தாயின் கருவில் உருவாகும்போதே தேவனால் திட்டமாகத் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். .

நம்மைக் கருவிலேயேத் தெரிந்து கொண்டது மட்டுமல்ல நம்மைக் கடைசிவரை கன்மணியைப் போல காக்கவும் செய்கிறார். இதை நாம் சிம்சோனின் வாழ்க்கையில் மட்டுமல்ல நம் ஒவ்வொருவர் வாழ்விலும் பார்க்கிறோம். ஒருவேளை நாம் நம் வாழ்க்கை என்னும் பிரயாணத்தில் சிம்சோனைப் போல, ராகாபைப் போல நொறுங்கிப் போனாலும்,, கர்த்தர் உடைந்த பாத்திரமான நம்மை சீர்ப்படுத்தி மறுபடியும் நம்மைப் புதுப்பிக்கிறார்.

உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணைசெய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது; என் தாசனாகிய யாக்கோபே நான் தெரிந்து கொண்ட யெஷூரனே, பயப்படாதே.                             (ஏசா: 44: 2)

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment