கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1414 நம் அன்றாட வாழ்க்கையில் வாழ்ந்து காட்ட வேண்டுபவை??

2 சாமுவேல் 8:15 இப்படியே தாவீது இஸ்ரவேல் அனைத்தின்மீதும் ராஜாவாயிருந்தான். அவன் தன்னுடைய எல்லா ஜனத்திற்கும் நியாயமும் நீதியும் செய்து வந்தான்.

நாம் இந்த நியாயம், நீதி என்ற வார்த்தைகளைக் கேட்கும்போது என்ன ஞாபகம் வரும்? எனக்கு ஞாபகத்தில் வருவதெல்லாம் நியாயம் என்ற வார்த்தைக்கு இன்றைய அரசியலும்,  நீதி என்ற வார்த்தைக்கு நீதி கொடுக்கும் தெய்வமும் தான்!

ஆனால் வேதத்தை கவனமாகப் படிக்கும்போது, இந்த வார்த்தைகள் இரண்டும் வெகு நெருக்கமாக அமைந்துள்ளன. நிச்சயமாக கர்த்தருடைய பிரதிநிதிகளாயிருந்தவர்கள் இதை தங்களுடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினர். உண்மையில் பார்த்தால், நீதி நியாயம் என்று வாய்மொழியாகப் பேசித்திரியாமல்,  இவை இரண்டையும் அவர்கள் வாழ்ந்து காட்டினர்.

இதை கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம்! நீதி என்ற வார்த்தைக்கு,  எபிரேய மொழியில் ‘tzedek’ என்ற வார்த்தைக்கு, நேர்மை அல்லது உண்மை என்ற அர்த்தம் வரும்.

இதை மனதில் கொண்டு இன்றைய வேதாகமப் பகுதியைக் காண்போம். தாவீது விசேஷித்த பெலனும், விசேஷித்த பெருந்தன்மையையும்  கொண்டவனாய் இஸ்ரவேல் மக்களுக்கு முன் சாட்சியாக வாழ்ந்தது மட்டும் அல்லாமல்  அவன்  நீதியும் நியாயமும்  கொண்டவனாய் இருந்தான்.

தாவீது பரலோக தேவனின் குணமாகிய நியாயமும் நீதியும் கொண்டவனாய் இஸ்ரவேலை ஆண்டான். இதை எப்படி நாம் அறிவோம்?  ஒரு நிமிஷம்! தாவீதினுடைய ஆட்சியில் பணக்காரர்களுக்கு மட்டுமா  நியாயம், நீதி கிடைத்தது?  எல்லா ஜனத்துக்கும் கிடைத்தது என்று வேதம் சொல்கிறது. இது ஒன்றும் அவன் ஓட்டு வாங்க உபயோகப்படுத்தின சொற்கள் அல்ல!  அவனுடைய ஆட்சியின் அடிப்படையே அவனுடைய நியாயமும், நீதியும் தான்!

நியாயமும், நீதியும், நேர்மையும், உண்மையும்  கொண்ட யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? இவரை முற்றிலும் நம்பலாம் என்ற குணம் உண்டா?  நாம் அப்படி ஒருவரை நம்ப ஆரம்பித்தால் அவரிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்போம் அல்லவா?  அவர் நம்மை கைவிட மாட்டார் என்று நம்புவோம் அல்லவா?  இதைத்தான் மக்கள் தாவீதிடம் கண்டனர்.

நேர்மையான, நியாயமான வாழ்க்கை!  இந்த வார்த்தைகள் நாம் யார் என்று காட்டுபவை மட்டும் அல்ல! இவை நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் வாழ்ந்து காட்ட வேண்டுபவை! இவை நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்று உலகத்துக்கு எடுத்துக் காட்டுபவை! இவை நம்மிடம் உண்டா?

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

Leave a comment