கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1629 பிள்ளைகளுக்காக உன் வாழ்வை மாற்றிக்கொள்!

ஆதி: 5: 22  ஏனோக்கு, மெத்தூசலாவைப் பெற்ற பின்,  முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான்

லெந்துகால தியானத்தைத் தொடருவோம்!

நாம் சென்ற வாரம் காயீனுடைய தலைமுறையினர் பாவத்தில் வாழ்ந்ததைப் பற்றி பார்த்தோம். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்த ஆதாமுக்கும், ஏவாளுக்கும்,  கர்த்தர் ஆபேலுக்கு  பதிலாக கொடுத்த சேத்தின் பிள்ளைகளைப் பற்றி இன்று பார்ப்போம். இந்த அதிகாரம் தான் ஆதாமின் தலைமுறையை அவனுடைய குமாரனாகிய சேத்தின் தலைமுறையோடு இணைக்கும் பாலமாகும்!

 முதலில் இந்த இரு சந்ததியினருக்கும் பெயரில் உள்ள ஒற்றுமையைப்  பாருங்களேன்!

 காயீனின் சந்ததியினரின் பெயர்கள், ஏனோக்கு, மெகுயவேல், மெத்தூசவேல், பின்னர் லாமேக்கு என்பவைகள்!

சேத்தின் தலைமுறையில் உள்ள பெயர்கள், ஏனோஸ், மகலாலெயேல், மெத்தூசலா, பின்னர் லாமேக்கு என்பவைகள்!

இந்த இரு சந்ததியாரிலும் ஒரு லாமேக்கு இருந்ததைப் பார்க்கிறோம்!

காயீனுடைய லாமேக்கைப் பற்றி நாம் படித்தாயிற்று. அவனுக்கு மூன்று குமாரர்கள் , யாபல், யூபால், தூபால் காயீன் என்பவர்கள் என்றது நமக்கு தெரிந்ததே!

சேத்துடைய, நோவாவுக்கும் மூன்று குமாரர்கள் இருந்தனர். அவர்கள் சேம், காம், யாப்பேத் என்பவர்கள்.

இரண்டு சந்ததியிலும் ஒரு ஏனோக்கு இருந்தார்கள். ஆதி 4:17 ல், காயீன் ஒரு பட்டணத்தைக் கட்டி அதற்கு தன் குமாரனாகிய ஏனோக்கின் பெயரிட்டான். அந்த பட்டணத்தில் அவன் சந்ததியார் பாவத்தில் வாழ்ந்தனர் என்று நாம் ஏற்கனவே படித்தோம் அல்லவா!

இன்றைய வேதாகமப் பகுதியில்  சேத்தின் சந்ததியான ஏனோக்கு, மெத்தூசலாவைப் பெற்ற பின், தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான் என்று பார்க்கிறோம்.

சற்று கவனியுங்கள்  மெத்தூசலாவைப்  “ பெற்ற பின் ” என்ற வார்த்தையை!  என்ன ஆயிற்று அந்த பிள்ளை  பிறந்த பின்? தன் பிள்ளைகளை ஆவிக்குரிய வாழ்க்கையில் நடத்தும் பெரும் பொறுப்பு அவன் வாழ்க்கையை மாற்றி, அவனை ஆவிக்குரிய வாழ்க்கையில் அக்கறை காட்ட  செய்தது  என்பது தான்  அர்த்தம். தேவனோடு சஞ்சரித்து, அவன் தன் குடும்பத்தை அன்பு, அரவணைப்பு, சமாதானம் நிறைந்த தோட்டமாக மாற்றினான்.

ஏனோக்கு  சரித்திரத்தில் ‘மரித்தான்’ என்ற வரி எழுதப்படாமல், உயிரோடே இருக்கும்போதே தேவனால் பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவன் மட்டுமல்ல  அவனே தேவனோடு சஞ்சரித்த  முதல் மனிதனும் கூட!  ஆதாம் கூட அனுபவிக்காத ஒரு அனுபவம் அவனுக்கு கிடைத்தது! தேவனோடு நடந்த அனுபவம்! இன்று தேவனோடு சஞ்சரிக்க முயலும் உன்னை ஒருவேளை தேவ்ன் பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் போனாலும், நிச்சயமாக அவருடைய தெய்வீக பிரசனத்தை உணரும் சிலாக்கியம் கிடைக்கும்!

நாம் தேவனோடு சஞ்சரித்தால் தான்  ஏனோக்கைப் போல நம் குடும்பத்திலும், நம்முடைய பிள்ளைகள் வாழ்க்கையிலும் ஆசீர்வாதத்தைக் காண முடியும். இன்று நம் குடும்பத்தில் சமாதானம்  இல்லாமல் இருப்பதற்கும், நாம் கண்ணீர் சிந்துவதர்க்கும், நாம் தேவனோடு நெருங்கி ஜீவிக்காதது  காரணம் என்று உணர்கிறீர்களா?

ஏனோக்கு தன் பிள்ளைகள் பிறந்தபின்னர் தன்னுடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றிக்கொண்டான். அவன் தேவனோடு அதிகமாக நெருங்கி வாழ ஆரம்பித்து, தன் பிளைகளுக்கு ஒரு உதாரணமாகைருந்தான். அதனால் அவன் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட்டனர்! அவன் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டது!

ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்தான், அவன் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட்டனர் என்ற வாசகத்தை உன் உள்ளத்தில் எழுதி வை! இன்று உன் பாவமான வாழ்வை விட்டு மனந்திரும்பு!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment