கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ் 764 ஒரு மா பெரும் அதிசயம்!

யோவான் 3:16 தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் அன்புகூர்ந்தார்.

தாவீதையும் பத்சேபாளையும் குறித்து அநேக வாரங்கள் படித்து விட்டோம்.  தாவீதின் வாழ்க்ககையைத் தொடருமுன் ஒரு சிறிய இடைவேளை எடுக்கலாம் என்று நினைத்தேன்.

இந்த வருடத்தின் கடைசி மூன்று மாதங்களுக்குள் வந்திருக்கிறோம்.கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் நாட்கள் அதிக தூரம் இல்லை. தேவன் நம்மேல் கூர்ந்த மாபெரும் அன்பைக் கொண்டாடும் நாட்கள் அவை.

நாம் தாவீதின் வாழ்க்கையைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். அவன் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு பின்னால் இன்னொரு பெண்ணைத் தேடியது எனக்கு ஒருவேளை அவனுக்கு திருப்தியான அன்பு யாரிடமும் கிடைக்கவில்லையோ என்று நினைக்கத் தோன்றியது

நம்முடைய வாழ்க்கையிலும் நாம் நம்மை திருப்தி படுத்தும் அன்பைத் தேடி அலைந்ததில்லையா? இன்று உங்களுடைய வாலிப வயதில் அன்பைத் தேடுகிறீர்கள் அல்லவா? நீங்கள் மட்டும் அல்ல! எல்லோரும் அந்த வயதைக் கடந்தவர்கள் தான்! யாரும் இல்லை என்று சொல்லவே முடியாது. நம்மை முழுவதும் திருப்தி படுத்தும் அந்த ஒரு நபரை நம்முடைய உள்ளம் தேடிய நாட்களை யாராலும் மறக்க முடியாது!

இந்த உலகம் நம்மை அன்பைத்தேடி அலைய வைக்கிறது! அது முழுமையான அன்பாக இருக்கவும் வேண்டும் என்று உள்ளம் ஏங்குகிறது! அன்பு என்பது  சாக்லேட் கொடுப்பதும் பூ கொடுப்பதும் , போலியான ஆசை வார்த்தைகளை பேசுவதும்  அல்ல!  இதைத்தான் உணமையான அன்பு என்று உலகம் கருதுகிறது. அவை வெறுமையானவைதான் என்று நாம் அறிந்துகொள்ளும் முன் பல கசப்பான அனுபவங்களைத் தாண்ட வேண்டியிருக்கிறது!

ஆனால் நேற்றும் இன்றும் என்றும் மாறாத அன்பை நேச கர்த்தர் நமக்கு அருளுகிறார். இந்த நித்திய அன்புதான் நமக்கு முழுமையான அன்பு! இந்த அன்புதான் கர்த்தர் தம்முடைய ஒரே பேறான குமாரனை நமக்காகத் தந்தருள செய்தது!  அந்த மா பெரும் அன்புதான் கர்த்தராகிய இயேசுவை பசி, தாகம், சோதனைகள், அடி, முள்முடி, சிலுவை என்ற எல்லாவற்றையும் சகித்து நமக்காக அழுது, ஜெபித்து, சுகமளித்து, அற்புதங்களை செய்து, போதித்து, நித்தியமான வழியில் நடத்த செய்தது.

நாம் நல்லவர்கள் என்பதற்காக கர்த்தர் நம்மை நேசித்தாரா? இல்லவே இல்லை! அவர் நல்லவர்! அதனால்தான் நம்மை நேசித்தார்! அதுமட்டுமல்ல! இந்த உலகத்தில் நான் மட்டும் தான் அவருடைய ஒரே ஒரு பிள்ளையாயிருந்தால் அவர் என்னை எப்ப்டி நேசிப்பாரோ அப்படித்தான் என்னையும் உன்னையும்  நேசிக்கிறார்!

சூரியன் உதயமாவது எனக்கு ஒரு அதிசயம்!

சூரியன் அஸ்தமாவதும் ஒரு அதிசயமே!

ஆனால் இதைப் படைத்த தேவன் என் மேல் அன்பாயிருக்கிறார் என்ற

உண்மை என்னுடைய உள்ளத்தை சிலிர்க்க வைக்கும் மா பெரும் அதிசயம்!

அறுவடை காலம் ஒரு அதிசயம்!

வானத்து நட்சத்திரங்களும் அதிசயமே!

ஆனால் இவற்றைப்படைத்த தேவன் என் மேல் அன்பாயிருக்கிறார் என்ற

உண்மை என்னுடைய உள்ளத்தை சிலிர்க்க வைக்கும் மா பெரும் அதிசயம்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

Leave a comment