கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 775 பாழான நிலம் பயிர் கொடுக்கும்!

2 சாமுவேல் 13:20 அப்பொழுது அவள் சகோதரனாகிய அப்சலோம் அவளைப்பார்த்து: உன் சகோதரனாகிய அம்னோன் உன்னோடிருந்தானோ? இப்போதும் என் சகோதரியே, நீ மவுனமாயிரு.அவன் உன்னுடைய சகோதரன். இந்தக் காரியத்தை உன் மனதிலே வைக்காதே என்றான்.  அப்படியே தாமார் தன் சகோதரனாகிய அப்சலோமின் வீட்டில் தனித்துக் கிலேசப்பட்டுக்கொண்டிருந்தாள்.

தாமாருக்கு பொல்லாப்பு இழைக்கப்பட்டது. அவளை உபயோகப் படுத்திய பின்னர் அம்னோன் அவளைத் தன் அறையிலிருந்து வெளியேற்றி கதவைப் பூட்டினான். அதுவரை கலகலப்பாக வாழ்ந்து கொண்டிருந்த ராஜகுமாரத்தியான தாமார் இப்பொழுது தனித்துக் கிலேசப்பட்டுக் கொண்டிருந்தாள். அல்லது தனிமையில் தள்ளப்பட்டாள்!

அவளுடைய அண்ணனாகிய அப்சலோம் அவளை நோக்கி இந்தக் காரியத்தை மனதில் வைக்காதே என்று கூறி அவளைத் தன் வீட்டில் தனிமையில் வைக்கிறான்.

மனதில் வைக்காதே என்று அப்சலோம் கூறிய இந்த வார்த்தைகள்  எபிரேய  மொழியில் எந்த உணர்வுகளையும் மனதில் வைக்காதே  என்று அர்த்தமாகும். அப்சலோம் தன்னுடைய தங்கை தாமாரிடம்  தன்னுடைய உணர்வுகளை ஒதுக்கி விட்டு வாழும்படி கூறுகிறான். அவள் அனுபவித்தது எத்தனை பெரிய அவமானம் எவ்வளவு கேவலம்! எப்படி அந்த உணர்வுகளைத் தள்ளி வைக்க முடியும்.

நான் சொல்வது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்!  நம்மில் சிலர் இதை அனுபவித்திருக்கிறோம் அல்லவா? நம்முடைய இருதயத்தில் கத்தியால் குத்தி நம்முடைய மனதை இரண்டாய்ப் பிளந்த மாதிரி ஒரு துக்கம் நம் தொண்டையை அடைக்கும்போது,  யாராவது வந்து எதையும் மனதில் வைக்காதே அது தானாய்ப் போய்விடும் என்று இலகுவாகச்  சொன்னால் எப்படியிருக்கும்? தாமாருடைய இருதயம் இரண்டாய் பிளந்திருத்ந்தது! அவளுடைய சகோதரன் அவளை உபயோகப்படுத்தி தூக்கி எறிந்திருந்தான். அவள் இருதயத்தில் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது! அவளால் எப்படி எல்லாவற்றையும் மறக்க முடியும்? அப்சலோம் அவளுடைய உணர்வுகளுக்கு மூடி போட்டு மூடப்பார்க்கிறான்! அப்படியானால் அது ஒருநாள் வெடித்து விடும் அல்லவா?

தாமாரைப்போல தனிமையே வாழ்க்கையான எத்தனை பேர் நம்மில் உண்டு!  மனதின் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் மூடி போட்டு அடைத்து விட்டு வாழ்ந்து வருபவர்கள் எத்தனை பேர் உண்டு? தாமாரைப்போல தனிமையில் ஐயோ என் வாழ்க்கையே பாழாகிவிட்டதே எனக்கு எந்த சந்தோஷமும் இனி வாழ்கையில் இல்லை என்று கதறும் உங்களுக்கு இன்று ஒரு நற்செய்தி!

பாழாய்க்கிடந்த இத்தேசம் ஏதேன் தோட்டத்தைப் போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாய் இருக்கிறது என்றும் சொல்வார்கள். 

கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர் நிலமாக்குகிறேன் என்றும் அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்து கொள்வார்கள், கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதை செய்வேன்.    ( எசே: 36: 35,36)

தனித்து  வாழ்ந்து கொண்டிருக்கும் நீ தைரியமாயிரு! பாழாயிருக்கும் உன் வாழ்க்கையை கர்த்தர் பயிர் நிலமாக்குவேன் என்று வாக்குக் கொடுத்திருக்கிறார்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

 

Leave a comment