கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ் 780 இன்று மட்டுமே உண்டு என்று வாழ்வோம்!

மீகா 7: 18,19  தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார். அவர் திரும்ப நம்மேல் நம்மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.

நான் என்றாவது பேசிய வார்த்தைகளையும், நடந்துகொண்ட விதத்தையும் மாற்றி வேறு வார்த்தைகளை பேசி, வேறு மாதிரி நடந்து கொண்டால் நலமாயிருக்கும் என்று நினைத்ததுண்டா? என்று சற்று யோசித்தேன். நிச்சயமாக அப்படிப்பட்டவை உண்டு! ஆனால் அதை இனி என்னால் மாற்றவே முடியாது!

ஒருதடவை நடந்தது நடந்ததேதான்! எத்தனைதடவை இப்படி நடந்து போன் காரியத்தைக் குறித்து மறுபடியும் மறுபடியும் வருத்தப்பட்டிருக்கிறோம்! நான் இப்படி பேசியிருக்கவே கூடாது, இப்படி நடந்து கொண்டிருக்கவே கூடாது, தவறு பண்ணிவிட்டேன் என்று குற்ற உணர்ச்சியால் மனதுக்குள் புலம்பியதில்லையா?

தாவீதின் வாழ்க்கையின் மூலம் எவ்வாறு நாம் நன்மையான வாழ்க்கையை வாழலாம் என்று தொடர்ந்து படிக்கப் போகிறோம். நாம் கடந்து போன செயலுக்காக மனதூக்குள் அழுது புலம்பி நம்மையே நாம் வருத்திக்கொள்ளாமல் வாழ்வதுதான் கர்த்தர் கொடுக்கும் நன்மையான வாழ்க்கை!

அப்படியானால் என்ன? நான் செய்த எல்லாமே சரியா? நான் செய்தது தவறு என்று நினைக்க வேண்டாமா? என்று நாம் நினைக்கலாம். நிச்சயமாக நாம் செய்த தவறை நாம் உணர வேண்டும், அதைக்குறித்து மனஸ்தாபப்பட வேண்டும், அதற்காக மன்னிப்பும் கேட்க வேண்டும். அதோடு மட்டும் அல்லாமல் கர்த்தருடைய உதவியால் நான் அந்தத் தவறிலேயே வாழ்ந்து கொண்டிராமல் அதைவிட்டு விலகி வாழ்க்கையில் முன் நோக்கி பயணம் செய்ய வேண்டும்.

தாவீதைப் பாருங்கள்! விபச்சாரம், கொலை, குழந்தையின் பரிதாபமான மரணம் இவை அவன் மனதை அரித்துக் கொண்டு அல்லவா இருந்திருக்க வேண்டும்! ஐயோ இப்படி நடவாமல் இருந்திருந்தால் நலமாயிருக்கும் என்றுதானே அழுது புலம்பியிருப்பான். அதுமட்டுமல்ல தன்னுடைய குற்ற உணர்ச்சியால் உந்தப்பட்டு குடும்பத்தை கவனிக்காமல் இருந்ததால்தானே அம்னோன் தாமார் என்ற பிள்ளைகளின் வாழ்க்கை கெட்டு அழிந்தது!

2 சாமுவேல் 13: 24 – 28 ல் அப்சலோம் தன் தகப்பனைத் தான் ஆடுகள் மயிர் கத்தரிக்கும் இடத்திற்கு வருமாறு வருந்தி அழைக்கிறான். ஆனால் தாவீது அதை மறுத்து விட்டான். இதைப் படிக்கும்போது அப்சலோம் தாவீதை ஏன் அவ்விதம் வருந்தி அழைத்தான்? தாவீது அங்கு இருந்திருந்தால் அவனால் அம்னோனை இவ்வளவு சுலபமாக தீர்த்துக்கட்டியிருக்க முடியுமா? பின்னர் ஏன் அழைத்தான்? என்று யோசித்தேன்!  ஒருவேளை அப்சலோம் தான் அம்னோனை அடித்துக் கொன்றதை தன் தகப்பனாகிய தாவீது தன் கண்களால் காண வேண்டும் என்று விரும்பினானோ என்னவோ என்று நினைத்தேன். தாவீதின் பாவத்தால் பிள்ளைகளுக்குள் நடக்கும் பொல்லாப்பை அவன் தகப்பன் கண்ணால் பார்க்க வேண்டும் என்றுதான் நினைத்திருப்பான்.

அப்சலோம் என்ன மனதில் நினைத்து செயல்பட்டானோ தெரியவில்லை ஆனால் நான் தாவீதின் இடத்தில் இருந்திருந்தால் அன்று அப்சலோம் அழைத்த அழைப்புக்கு இணங்கி ஆடுகளை மயிர் கத்தரிக்கும் இடத்திற்கு போகாததை நினைத்து என் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியால் அழுது புலம்பியிருப்பேன். போயிருந்தால் ஒருவேளை தாவீதால் அந்தக் கொலையைத் தடுத்திருக்க முடியும் அல்லவா?

தாவீதின் வாழ்க்கையில் அழுது புலம்ப, குற்றத்தால் மனக்கசந்து அழ அநேக காரியங்கள் இருந்தன. ஆனாலும் சங்கீதம் 51 ல் தாவீது

அப்பொழுது  பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன். பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.  (சங்:51:13)

என்று கூறுகிறான். தாவீது தன்னுடைய குற்ற உணர்ச்சிகளிலேயே வாழாமல் தன்னுடைய குற்றங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு பெற்று அதைத் தாண்டி தன்னுடைய ஓட்டப் பிரயாணத்தைத் தொடருவதைப் பார்க்கிறோம். பாதகரை கர்த்தருக்குள் வழிநடத்தும் நிலைக்கு வந்துவிட்டான்.

நம்முடைய கர்த்தராகிய ஆண்டவர் நம் மேல் குற்ற உணர்வு என்ற நுகத்தை சுமத்தவே மாட்டார். நம்முடைய பாவங்கள், அக்கிரமங்கள் எல்லாமே சமுத்திரத்தின் ஆழத்தில் போடப்பட்டுவிட்டன. அவர் நன்மையான வாழ்வையே நமக்கு ஈவாகத் தருகிறார்.

இது நமக்கு எத்தனை மகிழ்ச்சியான செய்தி! குற்ற உணர்வால் நாம் தலை குனிய வேண்டாம்! மனக்கசந்து கண்ணீர் விட வேண்டாம்! நன்மையான வாழ்வைத்தரும் இயேசு கிறிஸ்து கொடுக்கும் அற்புத விடுதலை இது!

நேற்று என்னைவிட்டு கடந்து விட்டது! காலம் அதை எடுத்து விட்டது!

நாளை ஒருவேளை என்னைத்தேடி வராது!

ஆனால்  இன்று என்னிடம் இன்னும் இருக்கிறது!

என்று ஒவ்வொருநிமிடமும் எண்ணி இன்றைய தினத்தில் நாம் கிறிஸ்து நமக்கு கொடுக்கும் நன்மையான வாழ்வை சந்தோஷமாக வாழ கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

Leave a comment