ஏசாயா:7:14 …. இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
இந்த வாரம் நாம் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையை உலகமே நினைவு கூறும் வாரம். ஆதலால் அவருடைய முதலாம் வருகையைப் பற்றி நாமும் படிக்கலாம் என்று நினைக்கிறேன்.
நாம் ஆரம்பிக்கும் முன்பதாக 800 வருடங்களுக்கு பின்னால் இன்று வானில் வலம் வரும் கிறிஸ்மஸ் நட்சத்திரத்தைக் காணத் தவறாதீர்கள்! இதைப்பற்றி நிச்சயமாக கேள்விப்பட்டிருப்பீர்கள்! இரண்டு மகா பெரிய கோள்கள் ஒன்றிணையும்போது (60 ஆயிரம் கிமீ இடைவெளி இருந்தாலும்) நம்முடைய கண்களுக்கு அது ஒரு பெரிய நடசத்திரமாகத் தெரியும்! அப்படிப்பட்ட நட்சத்திரம் ஒன்றுதான் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பிறப்பின்போதும் தென்பட்டது! அதனால் இன்று இரவு 6.30 லிருந்து 8 மணிக்குள் குடும்பமாக கிறிஸ்மஸ் நட்சத்திரத்தை பார்ப்பது மட்டுமல்லாமல் குடும்பத்தோடு அமர்ந்து இயேசுவின் பிறப்பை நினைவுகூர்ந்து அவரை ஸ்தோத்தரியுங்கள்!
நம்முடைய வேதத்தில் உள்ள நான்கு சுவிசேஷங்களும் நான்கு முக்கிய செய்தியை வெளிப்படுத்துகின்றன! மாற்கு சுவிசேஷம் இயேசு கிறிஸ்துவை ஒரு தாழ்மையுள்ள சேவகனாகவும், லூக்கா அவரை மனிதக் குமாரனாகவும், யோவான் அவரை தேவனுடைய குமாரனாகவும், நாம் படிக்கப்போகும் மத்தேயு அவரை மேசியாவாகவும் சித்தரிக்கின்றன! மத்தேயு தன்னுடைய சுவிசேஷத்தை ஆரம்பிக்கும்போது இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு என்று எழுதியிருப்பதைப் பார்க்கிறோம். கிரேக்க மொழியில் அது இயேசு கிறிஸ்துவினுடைய ஆதியாகமம் என்று எழுதப்பட்டுள்ளது. இன்று அந்த வம்ச வரலாறை சற்றுப் பார்ப்போம்!
முதலாவது இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரளாறு நமக்கு அவர் ஒரு மானிடனாய் அல்லது ஒரு மனிதக்குமாரனாய் சாதாரணமான இஸ்ரவேல் குடும்பத்தில் பிறந்தவர் என்றுவிளக்குகிறது! அவர் தாவீதின் குமாரன் என்றும் அறிகிறோம்!
இன்றும் குடும்ப வரலாறு பல கலாசாரங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. யூதர்கள் அதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தனர். கிபி 70 ம் ஆண்டில் அவர்களுடைய வரலாறு பதிப்பு புத்தகங்கள் அழிக்கப்பட்டன. அது வரை அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய பூர்வீகத்தை சொல்லக்கூடிய நிலையில் இருந்தனர்!
இரண்டாவது இந்த வரலாறு இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் மூலம் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறியதைக் குறிக்கிறது!
ஏசாயா தீர்க்கதரிசி 7:14 ல் ….இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள் என்று கூறியிருக்கிறார்.
இந்த வரலாறு முழுவதும் வாசிக்கும்போது, இவன் இவனைப் பெற்றான் என்று ஒவ்வொருவரின் தகப்பன்மாரின் பெயர் இடம்பெறுவதைப் பார்க்கிறோம். ஆனால் 16 ம் வசனத்தில் யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான். அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார் என்று யோசேப்பு இயேசுவைப் பெற்றத் தகப்பன் அல்ல அவர் பரிசுத்த ஆவியால் உற்பவித்தார் என்ற உண்மையை மத்தேயு விளக்குகிறார்.
அதுமட்டுமல்ல ஏசாயா தீர்க்கதரிசி இஸ்ரவேல் மக்கள் பாபிலோனியரால் அடிமைத்தனத்துக்குள் கொண்டு போகப்படுவதைக் கண்டு, 9:6 ல் நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும் …. என்று மேசியாவின் வருகையைக் குறித்து சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று.
கடைசியாக இயேசு கிறிஸ்துவின் வரலாறு தேவனாகியக் கர்த்தரின் மகா பெரிய கிருபையைக் காட்டுகிறது! இயேசு கிறிஸ்து தாவீதின் வம்சத்தில் இந்த உலகுக்கு வந்தார். அவருடைய பிறப்பின்மூலம் தீர்க்கதரிசனங்கள் நிரைவேறின!அதுமட்டுமல்லாமல் அவருடைய பிறப்பின்மூலம் தேவனாகியக் கர்த்தருடைய இரக்கங்களும், கிருபையும் வெளிப்பட்டது! உதாரணமாக அவருடைய வரலாறில் இடம்பெற்ற பெண்களைப் பாருங்கள்!
தாமார் ( ஆதி:38:1-30) தன்னுடைய மாமனாராகிய யூதாவின் மூலம் பெற்ற பேரேஸ் இயேசுவின் வரலாற்றில் இடம் பெற்ற கிருபை!
ராகாப் (யோசுவா 2:1-24) என்ற எரிகோவின் மதில்மேல் வாழ்ந்த வேசியை அவருடைய வம்சத்தில் இடம் பெற செய்த கிருபை!
ரூத் ( ரூத் 1:1-7) என்ற மோவாபியப் பெண்ணைத் தன் வம்சத்தில் இடம் பெற செய்த கிருபை!
உரியாவின் மனைவி ( 1 சாமுவேல் 11:1-27) என்ற பத்சேபாள் தாவீதோடு விபசாரம் செய்தவள்! அவளையும் தன் வம்ச வரலாற்றில் இடம் பெற செய்த மா பெரும் கிருபை!
ஆம்! அதே கிருபைதான் நான் பாவியாக இருந்தபோது என்னையும் நேசித்து தம்முடைய பிள்ளையாக்கியது! எத்தனை மாதயவு! அதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை!
இந்தக் கிறிஸ்மஸ் உனக்கு நம்பிக்கையைக் கொடுக்கட்டும்! தேவனுடைய வாக்குகள் ஒன்றும் நிறைவேறாதே போகாது என்ற விசுவாசத்தை கொடுக்கட்டும்! தேவனுடைய மகா பெரிய தயவும், கிருபையும், அனுகூலமும் நமக்கும் உண்டு என்ற நிச்சயத்தைக் கொடுக்கட்டும்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்