கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1464 ஏன் என்னை இவ்வாறு இழிவு படுத்துகிறாய்?

2 சாமுவேல் 12:9  கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பான இந்தக் காரியத்தை செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன?

தாவீதும் பத்சேபாளும் உண்மையாக மனந்திருந்தியதால் கர்த்தர் அவர்களை  மன்னித்து ஏற்றுக்கொண்டார் என்று எழுதவேண்டுமென்றுதான்  எனக்கு ஆசை!

ஆனால் கர்த்தர் தன்னுடைய பாதைத் தவறிப் போய் மனந்திருந்திய பிள்ளைகளை எவ்வாறு முற்றிலும் மன்னிக்கிறார் என்று நாம் பார்க்குமுன், இன்றைய வேதாகம வசனத்தை சற்று நேரம் படிப்போம். இந்த இடத்தில் நம்மை தேவனாகிய கர்த்தருடைய இடத்தில் வைத்துப் பார்ப்போமானால், அவர் நம்மைக் காணும்போது அவருடைய மனம் வேதனைப்படுவது கொஞ்சமாவது புரியும்!

நாத்தான் தாவீதிடம் வெளிப்படையாக அவனுடைய ஏமாற்றுத்தனத்தையும், கொலையையும் பற்றி பேசினபோது, நீ ஏன் இந்தப் பொல்லாப்பானதை செய்தாய்? ஏன் கர்த்தரை அசட்டை பண்ணினாய் என்று கேட்கிறார்.

ஒரு கொடிய காரியத்தைப் பற்றி பேப்பரில் படிக்கும்போதோ, கேட்கும்போதோ நம்முடைய குமுறலில் நாம் கேட்போம் அல்லவா,  ஏன் இந்த சிறுமியை கொலை செய்தான்?  ஏன் இந்த வெறித்தனமான செயல்? எப்படி இதை செய்ய மனது வந்தது? என்று, அவ்விதம் தான்  நாத்தான் தாவீதிடம் நீ ஏன் இந்தப் பொல்லாப்பான காரியத்தை செய்தாய், ஏன் கர்த்தருடைய வார்த்தையை அசட்டை பண்ணினாய் என்று கேட்கிறார்.

இதை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள, இந்த அசட்டை என்ற வார்த்தையை எபிரெய மொழியில் பார்த்தேன். அதற்கு அந்த மொழியில் பார்த்த அர்த்தம் என்னை அதிர வைத்தது. ஆம்! அதற்கு அவமதிப்பு, இகழ்ச்சி அல்லது கேவலம் என்று அர்த்தம்.

இஸ்ரவேலின் ராஜாவானதும் கர்வம் தலைக்கு ஏறிவிட்டது தாவீதுக்கு. அந்தப் பதவிக்கு கொண்டுவந்த கர்த்தரைத் தள்ளிவிட்டு தன் இஷ்டமாக நடக்கலாம் என்று நினைத்து விட்டான்!

இது ஏதோ நமக்கு நன்கு தெரிந்த ஒரு காரியம் போல இல்லை? நான் என்னுடைய வாழ்வில் எத்தனைமுறை கர்த்தரை ஒதுக்கிவிட்டு என்னுடைய விருப்பம்போல்  நடந்து கொண்டேன் என்று யோசித்தேன்.

தாவீது கர்த்தரை அவமதித்து அல்லது கர்த்தரை இழிவு படுத்தியது போல நடந்த இந்தக் காரியத்தைக் கர்த்தர் பார்த்துக் கொண்டு இருந்தார். மலைகளிலும் குகைகளிலும் அலைந்து திரிந்த அவனை அரண்மனையில் அமர்த்திய தேவனுடைய கண்கள் முன்னே உரியாவை பட்டயத்தால் குத்தும்படி செய்தானே அது அவரை இழிவு படுத்திய காரியம் அல்லவா? கர்த்தரை அவமானப்படுத்திய காரியம் அல்லவா?

தேவனாகிய கர்த்தரின் அளவில்லா கிருபையை, அளவிட முடியாத அன்பை எத்தனையோ முறை அலட்சியம் பண்ணுகிற நாம் யாரும் தாவீதை விட சிறந்தவர்கள் ஆக முடியாது. தேவனுடைய கட்டளைகளை மீறுகிற நாம் யாரும் தாவீதை விட சிறந்தவர்கள் அல்ல!  நான் இங்கு கூறுவது உங்களில் சிலருக்கு நன்கு புரியும் என்று நினைக்கிறேன்.

உன் குடும்பம் முன்  நீ ஏன் என்னை இழிவு படுத்தினாய்? நீ வேலை செய்யும் இடத்தில் என் நாமத்தை ஏன் அசட்டை பண்ணினாய்? நீ தனியாக இருக்கும்போது நீ ஏன் என்னை கேவலப்படுத்துகிறாய்? இந்த சத்தம் காதுகளில் கேட்கிறதா?

நம்மை நேசிக்கும் கர்த்தரை மறுபடியும் மறுபடியும் நாம் புண்படுத்த வேண்டாமே! அவருடைய பார்வையில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் அவரை இழிவு படுத்தாமலும், அவரை அசட்டை பண்ணாமலும் இருக்கும்படியாக வாழ்வோம்!

கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

Leave a comment