கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ் 791 உன் நம்பிக்கை வீண்போகாது!

2 சாமுவேல் 14: 15,16 இப்போதும் என் ஆண்டவனாகிய ராஜாவோடே இந்த வார்த்தையை பேச வந்த முகாந்தரம் என்னவென்றால்: ஜனங்கள் எனக்குப் பயமுண்டாகினதினால் நான் ராஜாவோடே பேசவந்தேன். ஒருவேளை ராஜா தமது அடியாளுடைய வார்த்தையின்படி  செய்வார் என்று உமது அடியாளாகிய நான் நினைத்ததினாலும் வந்தேனே ஒழிய வேறில்லை. என்னையும் என் குமாரனையும் ஏகமாய்த் தேவனுடைய சுதந்திரத்திற்கு புறம்பாக்கி அழிக்க நினைக்கிற மனுஷனுடைய கைக்குத் தமது அடியாளை நீங்லாக்கிவிடும்படிக்கு ராஜா கேட்பார்.

தெக்கோவாவிலிருந்து வந்த பெண் புத்திசாலியானவள் என்று வேதம் குறிப்பிடுகிறது. அதற்குரிய எல்லா குணங்களும் அவளுக்கு இருந்ததை நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம்.

தாவீதின் நெருங்கிய நண்பனும், இஸ்ரவேலின் சேனைத்தலைவனுமாகிய யோவாப் தெக்கோவா அருகில் வளர்ந்தவன். அவன் இந்த புத்திசாலியான பெண்ணைப் பற்றி கேள்விப்பட்டு இருந்தான். ஒருவேளை சந்தித்துகூட இருக்கலாம். பகுத்தறிந்து உண்மையை அறியும் இந்த பெண், இரக்க குணமும், தெளிவான வார்த்தைகளை பேசும் திறமையும், பொறுப்பும், தன்னலமற்ற பரிவும் கொண்டவளாகவும் விளங்கினாள்.

நேற்றைய தினத்தில் பார்த்தமாதிரி ராஜாவின் சமுகத்தில் வேண்டுதலோடு நெருங்கும் தைரியமும் அவளுக்குத்தான் இருந்தது.

நாம் சில மாதங்களாக தாவீதைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். அவனுடைய பாவத்தால் அவனுடைய குடும்பத்துக்குள் முளைத்த பாவ செயல்கள், குடும்பத்தின் பிரிவினைகள் இவைகள் ஒருபக்கம் இருந்தாலும், மனந்திருந்தி, தேவனோடு நெருங்கி வாழ்ந்து கொண்டிருந்தது  தாவீதின் வாழ்க்கையின் மறுபக்கம். அவன் கர்த்தரை நோக்கி மன்றாடி

உமது இரட்சண்யத்தின்  சந்தோஷத்தை திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும் (சங் 51:12)

என்று ஜெபித்து கர்த்தரை மறுபடியும் திரும்பப் பற்றிக் கொண்டான்.

இந்த மனந்திருந்திய  தாவீது மறுபடியும் தன்னுடைய மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றான்.  இதை நன்கு அறிந்த தெக்கோவா ஊராகிய புத்திசாலியான பெண்ணும் தாவீது மீது நம்பிக்கை வைத்து அவனுடைய சமுகத்தில் நின்றாள். அவளுடைய நம்பிக்கை வீண்போகாது என்று விசுவாசித்தாள்.

இன்று இதை வாசிக்கும் உங்களில் அநேகர் உங்களுடைய வேலையை இழந்து அடுத்தாற்போல் எங்கு செல்வது என்ன செய்வது என்று திகைத்து நிற்கலாம்! அல்லது சாதாரண மருத்துவ சோதனைக்கு போய் அங்கே புற்று நோய் என்ற மரண தண்டணை கொடுக்கப்பட்டு தவித்துக் கொண்டிருக்கலாம்! அல்லது உங்களில் ஒருவர் திருமண பந்தம் அறுபட்டு விடும் நிலையில் கண்ணீரோடு வாழ்ந்து கொண்டிருக்கலாம்!

உங்களை வாழ்க்கையின் முனைக்கே தள்ளிவிட்ட எந்தப் பிரச்சனையானாலும் சரி, தெக்கோவாவூராளாகிய புத்தியுள்ள ஸ்திரீயை மறந்து போக வேண்டாம்.  அவள் தாவீது என்னும் உலகப்பிரகாரமான ராஜாவை நம்பி,

என்னையும் என் குமாரனையும் ஏகமாய்த் தேவனுடைய சுதந்திரத்திற்கு புறம்பாக்கி அழிக்க நினைக்கிற மனுஷனுடைய கைக்குத் தமது அடியாளை நீங்லாக்கிவிடும்படிக்கு ராஜா கேட்பார்

என்று  விசுவாசித்தாள். ஆனால் நம்முடைய ராஜா யாரென்று உங்களுக்குத் தெரியுமா? அவர் ராஜாதி ராஜா! சர்வ வல்லவர்! அவர்மேல் நம்பிக்கை வைக்கும்போது அவர் உன்னைக் கைவிடமாட்டார்.

ஹட்சன் டெய்லர் என்ற மிஷனரியைப் பற்றி தெரியுமா? அவருடைய வாழ்க்கையின் முனையில் உங்களைபோல வாடி நின்றபோது இவ்வாறு எழுதினார்,

என்னால் எழுதக்கூட முடியாதநிலையில் மிகவும் பெலவீனமாக உள்ளேன், என்னால் என்னுடைய வேதத்தை வாசிக்கவும் முடியவில்லை, ஜெபிக்கவும் முடியவில்லை, என்னால் கர்த்தருடைய அரவணைப்பான கரத்தில் ஒரு சிறு குழந்தையைப்போல் படுத்து அவரை முற்றிலும் நம்ப மட்டுமே முடிகிறது!

இன்று மட்டும் அல்ல என்றும் கர்த்தருடைய கரம் உன்னை அரவணைக்க காத்திருக்கிறது! அவரிடத்தில் நம்பிக்கையோடு வா! உன் நம்பிக்கை வீண்போகாது!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

Leave a comment