சாமுவேல் 4:3 ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வருவோம்; அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி ரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது என்றார்கள்.
நம்முடைய இந்த ராஜாவின் மலர்த்தோட்டத்துக்கு ஒவ்வொரு நாளும் உலகத்தின் 60 நாடுகளிலிருந்து சகோதர சகோதரிகள் வருகின்றீர்கள்! மனித உழைப்பைக் குறைக்கும் வகையில் வந்திருக்கும் மின்சாதனங்களைப் பற்றி உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை! எத்தனை நவீன சாதனங்கள் நம் இல்லங்களில் உள்ளன! நம்முடைய சமயலறையில் ஆரம்பித்து எல்லா வேலைகளையும் செய்ய நாம் மின் சாதனங்களையே சார்ந்திருக்கிறோம் அல்லவா?
இதை சொல்ல நான் மிகவும் வருந்தினாலும் சொல்லவே வேண்டியிருக்கிறது. இன்று நாம் ஒவ்வொருவரும் வானத்தையும் பூமியையும் படைத்த தேவாதி தேவனையும் நமக்கு உதவும் ஒரு மின் சாதனம் போல உபயோகப்படுத்துகிறோம். ஒருவேளை நான் சொல்வது சரியல்ல என்று எண்ணுவீர்களாகில் 1 சாமுவேல் 4 வது அதிகாரத்தில் நடந்த சம்பவத்தை வாசித்து விட்டு அது இன்றைய சமுதாயத்துக்கு எப்படி பொருந்துகிறது என்ரு சிந்தித்து பாருங்கள்.
கர்த்தர் சின்ன சாமுவேலிடம் பேசிய பின்னர், ஏலி அவனிடம் வந்து கர்த்தர் அவனுக்கு வெளிப்படுத்தின காரியத்தைக் கூறும்படி கேட்கிறார். ஏலிக்கு உண்மையிலேயே அங்கு குழம்பிக் கிடந்த காரியங்கள் நன்கு தெரியும். அவருடைய ஆசாரியரான குமாரர் இருவரும் தேவனுடைய ஊழியத்தின் மூலம் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர். ஊழியக்காரரே இப்படியிருக்கும் போது ஜனங்கள் எப்படியிருப்பார்கள்? வேசித்தனம் தலை விரித்து ஆடியது.
இஸ்ரவேல் மக்களின் ஆவிக்குரிய வீழ்ச்சிக்கு யார் காரணம்? புறஜாதியினரா? இல்லை! புறஜாதி பெண்களை மணந்து தேவனுக்கு கீழ்ப்படியாமல் போனதால் தாங்களே தங்களை பாவமென்ற குழியில் தள்ளி விட்டார்கள். புறஜாதியினரை மணப்பதால் தங்கள் வியாபாரம் சிறப்பாகும் என்றும் நினைத்தனர்.
ஆனால் அவர்கள் வாழ்க்கையில் கஷ்டம் வந்தபோது, யுத்தத்தில் அவர்கள் பெலிஸ்தரால் முறியடிக்கப்பட்ட போது, போர்க்களத்தில் நாலாயிரம்பேர் வெட்டுண்டு போனபோது, அவர்கள் தேவாதி தேவனை ஒரு மின் சாதனம் போல உபயோகிக்கத் துணிந்தனர்.
ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி இரட்சிக்கும்படி நம்முடைய நடுவிலே வர வேண்டியது என்றார்கள்.
நான் எப்படி வாழ நினைக்கிறேனோ அப்படியெல்லாம் வாழ்வேன், பணம் சம்பாதிப்பேன், சிற்றின்பத்தை அனுபவிப்பேன், ஆனால் ஏதாவது சற்று தவறு நேர்ந்து விட்டால் கடவுளை உபயோகித்து விடுவேன் என்ற எண்ணம் தான்!
அவர்கள் எப்படி சிந்திக்கிறார்கள் பாருங்கள்!
எங்கள் கடவுளைப் பார்! எங்களிடம் என்ன உள்ளது என்று பார்! உடன்படிக்கைப் பெட்டி உள்ளது! அது மாஜிக் பெட்டி! அது எங்களை இரட்சித்து விடும்!
நம்மில் எத்தனை பேர் கர்த்தரையும், அவருடைய வல்லமையையும் நம்முடைய வேலையை சாதிக்க உபயோகப்படுத்துகிறோம்? கர்த்தருடைய வல்லமையை மாஜிக் போல நினைக்கிறோம்?
ஏலியைப் போல நம்முடைய வாழ்வில் காணப்படும் உள்ளான குழப்பங்களை நாம் சரிப்படுத்தாமல் கர்த்தரை நமக்குத் தேவையான சமயத்தில் ஒரு மின் சாதனம் போல உபயோகப்படுத்த நினைக்க வேண்டாம்!
உங்கள் சகோதரி
Dr பிரேமா சுந்தர் ராஜ்
சாத்தானின் சிங்காசனம் என்று ஏன் பெர்கமு அழைக்கப்பட்டது என்று அறிந்து கொள்ள ஆவலா?
DO YOU WANT TO KNOW WHY PERGAMUM WAS CALLED THE SEAT OF SATAN?
Watch now! And share with others!
