ஆதி: 26 ,27 “ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும் ,
ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும், விவாகம் பண்ணினான்.
அவர்கள் ஈசாக்குக்கும், ரேபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.”
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வர். சிறு பிராயத்தில் நாம் எப்படி வளர்க்கப்படுகிறோமோ அப்படித்தான் நாம் முதிர்வயதில் இருப்போம். சிறுவயதில் சரியான பாதையில் நடத்தி, பிள்ளைகளை உருவாக்குவது ஒரு தாயின் கடமையல்லவா? பல ஆசிரியர்கள் ஒரு மனிதன் உருவாவதற்கு காரணமாயிருந்தாலும், எல்லாரையும் விட சிறந்த ஆசிரியர் நம் தாய் தான் என்பதை பலர் என்னோடு ஆமதிப்பீர்கள். அன்பு, அடக்கம், பாரம்பரியம், உபசரிப்பு, கர்த்தருக்கு பயப்படுதல், கர்த்தருக்கு காணிக்கை கொடுப்பது போல பல நல்ல பண்பாடுகளை நான் என் அம்மாவிடம்தான் கற்றுக்கொண்டேன்.
தாய்மாராகிய நாம் நம் பிள்ளைகளை கர்த்தருக்குள் வளர்க்க கடமைப்பட்டிருக்கிறோம். இன்று நாம் அந்த கடமையில் தவறுவோமானால், நாளை நம் பிள்ளைகள் திசை மாறி போகும்போது கண்ணீர் சிந்துவதில் பிரயோஜனமென்ன?
அப்படித்தான் நடந்தது ஈசாக்கு, ரெபெக்காள் தம்பதியினருக்கு.
வேதத்தில் கூறப்பட்டுள்ளது போல ஏசா இரு பெண்களை தன் பெற்றோர் விருப்பத்துக்கு மாறாக மணந்து, தன் தாய் தகப்பனுக்கு மன நோவு கொடுக்க காரணமென்ன? ரெபெக்காள் தன் உறவில், பாசத்தில் பட்சபாதம் காட்டி, யாக்கோபை அதிகமாக நேசித்து, ஏசாவை வெறுத்து, அன்பின் கூடாரமாக இருக்க வேண்டிய குடும்பத்தை இரண்டாக்கி கூறு போட்டதினாலல்லவா? அவனுக்கு தாயின் பாசமும், பரிவும், அறிவுரையும் , ஜெபமும், சரிவர கிடைத்திருந்தால், அவன் அவர்களைப் புண் படுத்தும் இந்த செயலை செய்திருக்கமாட்டான் என்று நான் நினைக்கிறேன். தன் தாய் தன்னை நேசிக்கவில்லை என்ற எண்ணம் அவனைத் தனிமையில் தள்ளியதால் ஒருவேளை அவன் அந்த ஊர் பெண்கள் பின்னால் அலைந்து அவர்களை மணக்கும்படி செய்திருக்கலாம். இப்பொழுது மனநோவால் கண்ணீர் வடித்து என்ன பிரயோஜனம்?
ஒரு தாயால் பிள்ளைகளின் போக்கை நிச்சயமாக உணர முடியும். நம் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பைக் கொடுக்க விரும்புகிறோம், நம் பிள்ளைகள் எல்லா கலைகளிலும் தேற வேண்டும் என்று பல நவீன பயிற்சிகளுக்கு அனுப்புகிறோம். ஆனால் நம் பிள்ளைகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் சிறந்து வளர, நாம் என்ன முயற்சி செய்கிறோம்? பலவிதமான நண்பர்களோடு வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தைக் கழிக்கும் நம் பிள்ளைகள், நம்மிடம் தானே ‘கர்த்தருக்கு பயப்படுதல்’ என்ற வாழ்க்கையின் அடிப்படை தத்துவத்தை கற்றுக்கொள்ள முடியும். இன்று நீ உன் பிள்ளையை கர்த்தருடைய வழியில் நடத்தாமல் போவாயானால் நாளை நீ கண்ணீர் சிந்த வேண்டியதிருக்கும். ஜாக்கிரதை!
ஜெபம்:
ஆண்டவரே, என் பிள்ளைகளின் ஆவிக்குறிய வாழ்க்கையில் நான் அதிக அக்கறை காட்ட எனக்கு உதவி தாரும். ஒரு நல்ல தாயாக என் கடமையில் தவறாமல் இருக்க எனக்கு பெலன் தாரும். ஆமென்!
