Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ் 349 செய்யும் வேலையில் வெற்றி வேண்டுமா?

மிரியாம் பார்வோன் குமாரத்தியிடம் ஞானமாய் பேசி குழந்தையின் தாயே குழந்தையை வளர்க்கும் திட்டத்தைக் கொடுத்தாள் என்று பார்த்தோம்.

நாணலினால் செய்த பெட்டியில் அவள் தம்பி மோசே நைல் நதிக்கரையில் வைக்கப்பட்டபோது, யார் அந்தப் பக்கம் வருகிறார்களோ,  அந்தப் பெட்டி யார் கண்ணில் படப்போகிறதோ என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தப் பெட்டி பார்வோனின் படை வீரர் கண்ணில் படுமானால் தன் தம்பி மறுநிமிடம் நைல் நதியில் பிணமாக மிதப்பான் என்பதும் இந்தப் பெண்ணுக்கு தெரியும். நிச்சயமாக அவள் தன் தம்பியை இழக்க விரும்பவில்லை, மனது திக் திக் என்று அடித்தது.

எந்த நிமிடம் என்ன நடக்குமோ என்று தெரியாத சூழலில், பார்வோன் குமாரத்தி அங்கு வருகிறாள்.  தன்னுடைய மனத்தைரியத்தை எல்லாம் ஒன்றாக சேர்த்து, கைகாலில் நடுக்கம் இல்லாமல், திடமாக நின்று பார்வோன் குமாரத்தியிடம், தன் தாய் தனக்கு கற்றுக் கொடுத்த விதமாய் அழகாக பேசி, தன் தம்பியின் உயிரைக் காக்கிறாள் இந்த இளம் பெண் மிரியாம். இந்த திடமான தைரியம் அவளுக்கு எப்படி இந்த இளம் வயதில் வந்தது?  

என்னுடைய இளம் வயதில், ஏதாவது ஒரு புதிய இடத்துக்கு போகவோ அல்லது புது நபர்களைப் பார்க்கவோ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், என்னைத் தேடி கண்டு பிடிக்க முடியாது. எங்காவது ஒரு மூலையில் புத்தகமும் கையுமாக  ஒதுங்கி விடுவேன். ஒரு கடையில் போய் பொருட்கள் வாங்க கூட தைரியம் இருக்காது.

ஒருநாள் என்னுடைய வேதாகம கல்லூரியில் நான் எல்லா ஆசிரியர் முன்பாகவும் ஒரு பிரசங்கம் செய்து காட்டவேண்டியிருந்தது. அந்த பத்து நிமிட செய்திக்காக பத்து நாட்கள் யாரும்  பார்க்காத இடத்துக்கு போய், சத்தமாய் எனக்கு நானே பிரசங்கம் பண்ணிப் பழகினேன். அவ்வளவு வெட்கமும், பயமும் நிறைந்த நான் இன்று இப்படி மாறினேன் என்று யோசிப்பேன். இன்றைய மனத்திடனும், தைரியமும் நிச்சயமாக ஒரே இரவில் வந்தவை அல்ல. தேவனாகிய கர்த்தர் மேல் வைத்த நம்பிக்கையும், விசுவாசமும், பரிசுத்த ஆவியானவர் எனக்குள்ளாய் வாசம் செய்ததுமே என்னை பெலப்படுத்தியது.

வேதத்தில் நியாதிபதிகள் 6 வது அதிகாரத்தில் கிதியோனைப் பற்றி படிக்கிறோம். அவன் மீதியானியருக்கு பயந்து, யாருடைய கண்ணுக்கும்  படாத இடம் பார்த்து கோதுமையை போரடித்துக் கொண்டிருந்த வேளையில் கர்த்தர் அவனை மீதியானியருடன் போரிட அழைக்கிறார். தொடை நடுங்கியாகிய அவன் சந்தேகப்பட்டு, அடையாளங்கள் கேட்டு, பல சாக்கு போக்கு சொல்லி தப்பித்து கொள்ள முயன்றான். ஆனால் நியா:6:34 ல் , கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன் மேல் இறங்கியபோது அவன் எக்காளம் ஊதி அனைவரையும் தன்னைப் பின் தொடருமாறு யுத்தத்துக்கு அழைத்தான் என்று பார்க்கிறோம். என்ன ஆச்சரியம்! இந்த தைரியமும், மனப்பலமும் எங்கிருந்து வந்தது. தேவனானவர் அவன் ஒரு காரியத்தை வெற்றியோடு செய்து முடிப்பதற்காக அவனோடு இருந்து அவனைப் பெலப்படுத்தினார்!

சிறுவயதிலேயே தன் தாயின் மூலம் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் மீது திட நம்பிக்கை வைக்க கற்றுக்கொண்ட மிரியாம், ஆபத்தான வேளையில் தேவனாகிய கர்த்தர் அவளுக்கு கொடுத்த பெலத்தினால் எந்த தயக்கமும், பயமும் இன்றி பார்வோன் குமாரத்தியை அணுகி தன்னுடைய காரியத்தை வெற்றியுடன் முடித்தாள்.

 விசுவாசம் என்பது தேவனுடைய கிருபையின் மேல் நாம் வைக்கிற திடமான நம்பிக்கை என்று மார்டின் லூதர் கூறினார்.

 சங்கீ: 16: 1 தேவனே என்னைக் காப்பாற்றும். நான் உம்மை நம்பியிருக்கிறேன்

என்ற சங்கீதக்காரனைப் போல திட நம்பிக்கையும் தைரியமும் எனக்கு வேண்டும் என்று நான் ஓவ்வொருநாளும் ஜெபிக்கிறேன்! நீங்களும் ஜெபியுங்கள்! கர்த்தர் உங்களை பலப்படுத்தி, திடப்படுத்தி, நீங்கள் செய்ய இருக்கிற காரியத்தை வெற்றியுடன் முடித்து தருவார்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 
 பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.

Leave a comment