Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ் 352 முறுமுறுப்பால் தண்டிக்கப்பட்ட தீர்க்கதரிசி!

strong>எண்ணா:12: 13, 15 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி; தேவனே அவளை குணமாக்கும் என்று கெஞ்சினான்.

அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்கு புறம்பே விலகப்பட்டிருந்தாள். மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம் பண்ணாதிருந்தார்கள்.

 

தேவனுடைய சேவைக்காக தங்களை அர்ப்பணித்த அநேக மிஷனரிகளைப் பற்றி படிக்கும்போது நாம் இவர்களை சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று எண்ணுவதுண்டு!

அப்படிப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெறுபவர் டாக்டர் பால் பிராண்ட் என்ற மருத்துவரும் அவர் மனைவி மார்கரெட் அம்மையாரும். அவர் நம்முடைய தமிழ்நாட்டில் ஒரு மிஷனரி பெற்றோருக்கு பிறந்தவர். தன் தகப்பனைப் போல லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்துவிட்டு 1946 ல் இந்தியாவுக்கு சேவை செய்ய திரும்பி வந்தனர்.

இன்று நம் நாட்டில் குஷ்டரோகம் மறைந்து வருகிறது. ஆனால் நான் கல்லூரியில் படித்த நாட்களில் குஷ்டரோகிகள் அநேகர் பிச்சை எடுப்பதைப் பார்த்திருக்கிறேன்.அவர்கள் சரீரம் உருவிழந்து போயிருக்கும். இப்படிப்பட்ட சில குஷ்டரோகிகள் பிச்சையெடுத்துக் கொண்டு வருவதை டாக்டர் பால் பிராண்ட் அவர்கள் பார்த்தார். அவர் அப்பொழுது  வேலூரில் வாழ்ந்து வந்தார். அங்கு அந்த கொடிய நோயைப் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். அதுவரை குஷடரோகிகளின் கைகளும் கால்களும் ஏன் இவ்வாறு உருமாறி அரிக்கப்பட்டு போகிறது என்று உலகத்திற்கு தெரியாது, இந்த நோய் வந்தால் இப்படி ஆகிவிடும் என்று தான் தெரியும். டாக்டர் பிராண்ட்டுடைய ஆராய்ச்சிக்கு பின், குஷ்டரோகம் முதலாவது ஒரு மனிதனின் நரம்புகளை பாதிக்கிறது, பின்னர் அதை சார்ந்த தசைகளையும் பாதிக்கிறது, ஆனால் முதலில் அது நரம்பை பாதிப்பதால் அதை சுற்றிய தசை அழுகும்போது மனிதன் வலியை உணர்வதில்லை என்ற பேருண்மை உலகுத்துக்கு தெரிய வந்தது!

இந்த மருத்துவ ஆராய்ச்சியை ஏன் நான் இன்று எழுதுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம். நாம் நேற்று வேதத்தில் முதலாவது தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்ட மிரியாம், தேவனுக்கு துதி ஆராதனை நடத்திய பெண்மணி மோசேக்கு எதிராக முறுமுறுத்ததால் குஷ்டரோகியானாள் என்று படித்தோம்.

குஷ்டரோகம் ஒருவனின் சரீரத்தின் நரம்பை பாதிப்பதுபோல், முறுமுறுப்பு நம்முடைய ஆத்துமாவின் நரம்பை பாதிக்கிறது! குஷ்டரோகம் சரீரத்தில் உணர்வு இல்லாமல் செய்வதால் தசை அழுகுவது கூட தெரியாது. முறுமுறுப்பு ஆத்துமத்தில் உணர்வு இல்லாமல் செய்வதால், நாம் தேவனை துதிப்பதில் பெறும் வல்லமையை இழந்து போகிறோம்!

மிரியாம் குஷ்டரோகியானாள் என்று வாசித்ததும் கர்த்தர் இவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்திருக்கக் கூடாது என்று முதலில் எண்ணினேன். ஆனால் குஷ்டரோகம் சரீரத்திற்கு என்ன கேடு விளைவித்ததோ அதையே முறுமுறுப்பும், கசப்பு எண்ணங்களும் நம் ஆத்துமாவிற்கு செய்யும் என்று உணர்ந்த போது கர்த்தர் நமக்கு இந்த உண்மையை போதிப்பதற்காகத்தான் இதை அனுமதித்தார் என்பதை உணர்ந்தேன்!

நாம் எத்தனை முறை கர்த்தருடைய ஊழியக்காரர்களைப் பற்றி குறை கூறுகிறோம், முறுமுறுக்கிறோம் என்று யோசித்து பாருங்கள்!

1 பேதுரு: 2: 17 கூறுகிறது எல்லாரையும் கனம் பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்பு கூறுங்கள்; தேவனுக்கு பயந்திருங்கள்; ராஜாவை கனம்பண்ணுங்கள் என்று.

என்ன நடந்தது தெரியுமா? கர்த்தர் மிரியாமை கைவிடவில்லை! ஒரே வாரத்தில் அவள் சுத்தமானாள்! இஸ்ரவேல் மக்கள் அவள் சுகமாகும் வரை காத்திருந்து பிரயாணத்தை தொடர்ந்தனர்! மிரியாம் மறுபடியும் இஸ்ரவேலின் முதல் தீர்க்கதரிசி என்ற உன்னத பதவியைத் தொடர்ந்தாள்! மிரியாமின் கடந்த காலத்தின் கசப்பான எண்ணங்கள், வெறுப்பான பேச்சு, முறுமுறுப்பு இவை யாவும் கர்த்தர் அவளை எதிர்காலத்தில் ஒரு தீர்க்கதரிசியாக உபயோகப்படுத்த தடையாக இருக்கவில்லை.

நாம்கூட எத்தனை முறை கசப்பான எண்ணங்கள், வெறுப்பான பேச்சு, முறுமுறுப்பு இவைகளுக்கு நம் வாழ்க்கையில் இடம் கொடுத்து ஆசீர்வாதத்தை இழந்து போகிறோம். இவ்வாறான தேவையில்லாத எண்ணமும், பேச்சும், நம்முடைய ஆத்துமாவையும், இருதயத்தையும் , நமக்கு தெரியாமலே குஷ்டரோகம் போல அரித்து விடுகிறது.

மற்றவர்களை பற்றி குற்றமாய் பேசும் பழக்கத்தை விட்டு விடுவோம்! அது கர்த்தர் நம்மிடம் விரும்பாத ஒரு குணம்!

கர்த்தர் தாமே தம்முடைய வார்த்தையின் மூலம் உங்க்லை ஆசீர்வதிப்பாரக!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.

Leave a comment