Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ் 361 சமுத்திரத்தை பிளந்த கீழ்க்காற்று!

யாத்தி: 14: 13 “…… நீங்கள் நின்று கொண்டு இன்றைக்கு கர்த்தர் உங்களுக்கு செய்யும் இரட்சிப்பை பாருங்கள்……”

நாங்கள் கிராமங்களில் உள்ள சிறு குழந்தைகளை ஒன்று சேர்க்கும்போது அவர்களை அமைதிப்படுத்துவது ஒரு கடினமான காரியமாய் இருக்கும். கட்டுக்கு அடங்காமல் பிள்ளைகள் கத்தும்போது சிலநேரம் உரத்தகுரலில் ‘இப்பொழுது அமைதியாய் இருக்கிறீர்களா இல்லையா’ என்று சத்தமிட்டால் தான் குழந்தைகள் அடங்குவார்கள்.

நான் யாத்தி: 14: 13 வாசித்தபோது இப்படித்தான் யோசித்தேன். இஸ்ரவேல் மக்களின் அழுகை, கூக்குரல், முறுமுறுப்பு இவற்றை கேட்ட தேவன், அவர்களிடம் ‘ நிறுத்துங்கள்! சற்று நேரம் அமைதியாய் இருங்கள்! என்று கூறவேண்டியதிருந்தது!

காலை வேளையில் இதை எழுதும்போது நான் சற்று நேரம் அமைதியாய் இருந்து பார்த்தேன்.  என்ன சத்தம் அங்கே! தென்னை ஓலைகளின் சலசலப்பு! மரத்தின் மேல் காக்கை குஞ்சுகளின் ஓலம்! ஒரு நாய் குலைக்கும் சத்தம் தூரத்திலிருந்து வந்தது! டக் டக் என்று யாரோ ஆணி அடிக்கும் சத்தம், பேப்பர் காரனின் மோட்டார் பைக் சத்தம்! இவைதான் செவிகளில் விழுந்தது! இது நாம் வழக்கமாக நகரத்தில் கேட்கும் சத்தம்!

அன்று சிவந்த சமுத்திரத்தின் கரையில் பாளையமிரங்கியிருந்த இஸ்ரவேலர்களைப் பார்த்து தேவனாகிய கர்த்தர் சற்று அமைதியாயிருங்கள் என்றார். அவர்கள் அமைதியாய் இருந்த வேளையில், அந்த வனாந்திரத்தில் அவர்கள் காதுகளில் என்ன தொனித்திருக்கும்?

ஒருபுறம் சமுத்திரத்தின் சலசலப்பு! மறுபுறம் வனாந்திரம் வழியாய் ஒருவேளை பார்வோனின் இரதங்கள் அவர்களை நோக்கி வரும்போது ஏற்பட்ட குதிரைகளின் சத்தமும் கூட அவர்கள் காதுகளில் விழுந்திருக்கும்!

பார்வோனின் சேனைகள் நெருங்கி கொண்டிருந்த ஆபத்தான இராத்திரி வேளையில் கர்த்தர் ஒரு பலத்த கீழ்க்காற்றை வரக் கட்டளையிட்டார். அந்த காற்று இரா முழுவதும் வீசி, சிவந்த சமுத்திரம் ஒதுங்கிபோய், ஜலம் இரண்டாய் பிளந்தது என்று வேதத்தில் யாத்தி: 14 : 21 ல் வாசிக்கிறோம்.

சென்னையிலும் அடிக்கடி பலத்த காற்று வீசும். அப்படிப்பட்ட நேரங்களில் இரவு முழுவதும் பலத்த காற்றின் சத்தமும், மரங்கள் காற்றில் ஆடும் சத்தமும் தான் காதுகளில் விழும். மற்ற எல்லா சத்தங்களும் பலத்த காற்றின் ஓலத்துக்குள் அடங்கிவிடும்!

சிந்தித்து பாருங்கள்! பார்வோனின் சேனைகள் நெருங்கி வரும் சத்தம் கேட்டு கலங்கி போய் நித்திரை வராமல், காலையில் உயிரோடு இருப்போமா பயத்தில் வானத்தை நோக்கி பார்த்துக் கொண்டிருந்த ஜனங்களின் காதுகளில் எந்த சத்தமும் கேட்காமல் பலத்த காற்றின் சத்தம் மாத்திரம் விழும்படி செய்தார் வல்லமையின் தேவனாகிய கர்த்தர். அதே சமயத்தில் அந்த காற்று அவர்களுக்கு இரட்சிப்பை கொண்டு வந்தது. சிவந்த சமுத்திரத்தை இரண்டாய் பிரித்தது!

ஒருவேளை அவர்கள் அமைதியாய் இராமல் போயிருந்தால், அவர்களுடைய முறுமுறுப்பும், கூக்குரலும் அவர்கள் செவிகளை மந்தமாக்கியிருக்கும்! பார்வோனின் இரதங்களின் சத்தம் அவர்கள் மனதை நோகடித்து தோல்வியுற செய்திருக்கும். தேவனுடைய இரட்சிப்பின் கரம் அவர்களுக்காக கீழ்க்காற்றின் மூலம் கிரியை செய்ததை அறியாமல் இருந்திருப்பார்கள்.

ஒருபுறம் சமுத்திரம்! மறுபுறம் வனாந்திரம்! சேனைகளின் ஓசை ஒருபுறம்! மோசே ஜனங்களை நோக்கி “நீங்கள் நின்று கொண்டு இன்றைக்கு கர்த்தர் உங்களுக்கு செய்யும் இரட்சிப்பை பாருங்கள்.” என்று கட்டளையிட்டான்! அவர்கள் அமைதியாய் இருந்தபோது பார்வோனின் இரதங்களின் சத்தத்தை அல்ல! அவர்களுக்காக சமுத்திரத்தை பிளவு படுத்திய கீழ்க்காற்றின் சத்தத்தை கேட்டார்கள்!

நம்முடைய பயம், சந்தேகம், அவிசுவாசம் என்ற சத்தங்கள் நம் செவிகளை மந்தமாக்கும் போது, தேவன் உனக்காக, உன் தேவைகளை சந்திப்பதற்காக கிரியை செய்வதை நீ எப்படி அறிய முடியும்?

தயவு செய்து சற்று நேரம் தேவனுடைய சமுகத்தில் அமைதியாய் தரித்திரு! அற்புதத்தை காண்பாய்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment