Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ் 375 முள்ளைப் போன்ற வார்த்தைகள்!


லேவி: 24: 11 அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரியின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான்.
நேற்று நாம் செலோமித் என்ற பெண் தவறான தீர்மானம் எடுத்து ஒரு எகிப்தியனை மணந்தாள் என்று பார்த்தோம். நாம் எடுக்கும் தவறான தீர்மானங்கள் நம்முடைய வாழ்வை சீரழிக்கும் என்று அறிந்தோம்.

இன்று நாம் அவள் குமாரன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்ததைப் பற்றி பார்க்கலாம். இவனும் இஸ்ரவேலன் ஒருவனும் பாளயத்தில் சண்டை போட ஆரம்பித்தார்கள். அவன் மேல் இருந்த கோபத்தை காண்பிக்க, செலோமித்தின் குமாரன் தேவனை நிந்தித்தான்.

எபிரேய மொழியில், இந்த இடத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள தூஷித்தான் என்ற வார்த்தைக்கு அர்த்தம், ’குத்தி ஓட்டை போடுவது’ அல்லது முள்ளால் குத்தி கிழிப்பது, என்பது. செலோமித்தின் மகனின் செயல் எனக்கு பலூன் ஊதுவதை ஞாபகப்படுத்துகிறது. பலூனை ஊதி , நுனியில் நூலை வைத்து கட்டி விடுவோம் அல்லவா? அப்படி நன்கு ஊதிய பலூனை ஒரு ஊசியை எடுத்து குத்தினால் என்ன ஆகும்? அது வெடித்து ரப்பர் துண்டுகள் காற்றில் பறக்கும்!

இதையே தான் செலோமித்தின் மகன் தேவனுடைய நாமத்துக்கு செய்தான். 400 வருடங்களாக பார்வோன் தேவனுடைய நாமத்தை தூஷித்து வந்தான் கர்த்தருடைய ஜனங்கள் அவனுக்கு அடிமையாயிருந்ததால் அவன் ஆபிரகாமின் தேவனை அவமதித்து வந்தான். ஆனால் செங்கடல் இரண்டாய் பிளந்து, இஸ்ரவேல் மக்கள் வெட்டாந்தரையில் நடந்து போனபோது, பார்வோனின் சேனையை அலைகள் மூடிப்போட்டபோது, பார்வோனுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் மகிமை புரிந்தது.

கர்த்தர் தம்முடைய மகிமையை பார்வோனுக்கு மட்டுமல்ல, இஸ்ரவேல் மக்களுக்கும் வெளிப்படுத்தினார். சீனாய் மலையடியில் அவர்கள் நின்றபோது அவருடைய மகிமையைக் கண்டு பயந்தார்கள்.

பாளயத்தில் வாழ்ந்த இந்த இளைஞன் நிச்சயமாகத் தேவனாகிய கர்த்தரின் மகிமையைப் பற்றி அறிந்திருப்பான். ஆனாலும் அவனுடைய வார்த்தையால் அவரை தூஷிக்க, அவருடைய நாமத்தை முள்ளால் குத்தி கிழிக்கத் துணிந்து தீர்மானம் எடுக்கிறான்.

என்னைப் பொறுத்தவரை குத்தின ஊசியின் வலி சிறிது நேரத்தில் மறைந்துவிடும் ஆனால் குத்தின வார்த்தையின் வலி நெஞ்ஞைவிட்டு நீங்காது!

ஆதலால், யாத்தி: 20: 7 ல் கர்த்தர், “ உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக, கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்” என்றார்.

நம்முடைய நாவால் தேவனாகிய கர்த்தரின் நாமம் மகிமைப்படுகிறதா/ அல்லது தூஷிக்கப்படுகிறதா? சிந்தியுங்கள்!

சங்கீதம்:34:13 ”உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கி காத்துக்கொள்”

 

நம்முடைய வார்த்தைகளை தீர்மானிக்கும் உரிமை நமக்கு உண்டு! அவற்றை மிகவும் ஜாக்கிரதையாக நாம் கையாட வேண்டும். ஏனெனில் அவை முட்டையை போல ஒருதடவை உடைந்தால், மறுபடியும் ஒன்று சேர்க்கவே முடியாது.

 

ஆண்டவரே என்னை கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும் காத்துக் கொள்ளும் ( யாக்:1:19) என்பதே இயேசு கிறிஸ்துவின் சீஷனான யாக்கோபின் ஜெபத்தைப் போல நம் ஜெபமாகவும் இருக்க வேண்டும்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

Leave a comment