Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ் 381- நம் கால்களை இழுக்கும் சரிவு மண்!


எண்ணா: 14:`2  “ இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி : எகிப்து தேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும். இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்.

 நான் உயர்நிலைப்ப் பள்ளியில் படிக்கும்போது, ஒருவருடம் நான் என்னுடைய சொந்த ஊரில் படிக்க வேண்டும் என்று என் அம்மா விரும்பினார்கள். நான் இந்த சென்னையில் படித்தால் ஒரு நல்ல பெண்ணாகத் தேற மாட்டேன் என்ற எண்ணம் அம்மாவுக்கு. ஒருவருடமாவது சொந்த ஊர் வாசனை வீச வேண்டும் என்று ஹாஸ்டலில் விட்டு விட்டர்கள். அந்தப் பெண்கள் விடுதியில் முறுமுறுப்பு அதிகம் இருந்ததாலோ என்னவோ, அங்கு எல்லாரும் பார்க்கும்படி இந்த வாசகம் எழுதப்பட்டிருந்தது! அது என்றுமே என் மனதைவிட்டு நீங்கியது கிடையாது. “ஒரு சிலர் எப்பொழுதும் ரோஜாவில் முள் குத்துகிறது என்று முறுமுறுக்கிறார்கள், ஆனால் ஒரு சிலரோ முள்ளில் மலர்ந்த ரோஜாவுக்காக கர்த்தரை துதிக்கிறார்கள் என்பதே அந்த வாசகம்.

எத்தனை உண்மை இது! நம்மில் சிலருக்கு முறுமுறுத்தலே வாழ்க்கையில் சுவை அல்லவா? இது இஸ்ரவேல் மக்களுக்கும் உரித்தான ஒரு வழக்கமாக இருந்தது. வேதத்தில் நாம் பார்க்கிறோம், இஸ்ரவேல் மக்கள் குறைந்தது 25 முறைகளாவது கானானுக்குள் போகும்வழியில் முறுமுறுத்தார்கள். ஒவ்வொருமுறையும் அவர்கள் தேவனுக்கு விரோதமாகவும், தேவனுடைய ஊழியர்களுக்கு விரோதமாகவும் முறுமுறுத்ததைப் பார்க்கிறோம்! ஆண்கள் மட்டும் அல்ல, பெண்களும் சேர்ந்து கொண்டார்கள் இந்த முறுமுறுப்பில். மோசேக்கு விரோதமாக அவன் சகோதரி மிரியாம் முறுமுறுத்ததைக் கண்டோம்.

நான் சிறு வயதில் ஒரு தடவை அம்மாவின் பொறுமையை சோதிக்கும்படியாய் முறுமுறுத்ததாய் ஞாபகம்! தேவனாகிய கர்த்தர் நீடிய பொறுமையுள்ளவர் தான் ஆனால் அவருடைய பொறுமையை சோதிக்கும்படியாய் அவருடைய பிள்ளைகள் கர்த்தருக்கு விரோதமாகவும், மோசேக்கு விரோதமாகவும் முறுமுறுத்தார்கள்.`

எகிப்திலிருந்து தம்முடைய பலத்த கரத்தினால் வழிநடத்தி, செங்கடலை இரண்டாய்ப் பிளந்து, அக்கினியாய், மேகமாய் முன்னும் பின்னும் காத்து வழிநடத்திய கர்த்தரைப் பார்த்து ’எகிப்து தேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும். இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்.” என்று இஸ்ரவேல் மக்கள் கூறியது கர்த்தருடைய பொறுமையை எவ்வளவு தூரம் சோதித்திருக்கும்!

எகிப்து தேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும் என்று அவர்கள் முறுமுறுத்ததால் என்ன அர்த்தம்? இனி நீர் எங்களை வழிநடத்த வேண்டாம், பார்வோன் எங்களுக்கு போதும் என்று சொன்னமாதிரி இல்லையா?

அதனால் அவர்களுக்கு என்ன கிடைத்தது? கர்த்தர் அவர்கள் இருதயத்தின் வாஞ்சையையே அவர்களுக்கு கொடுத்தார்.  கர்த்தர் தம்முடைய பாதுகாப்பை அவர்களிடமிருந்து எடுத்துப் போட்டார், அழிவிற்கு மேல் அழிவு அவர்களைத் தொடர்ந்தது.கர்த்தருக்கு விரோதமாய் முறுமுறுத்ததின் விளைவை அவர்கள் வெகு சீக்கிரம் உணர்ந்தனர்.

நம்முடைய முறுமுறுப்பினால் நாம் கர்த்தரை நம்முடைய வாழ்வைவிட்டு வெளியேறும்படி கட்டளையிடுகிறோம். தேவனுடைய பிரசன்னம் நம்மைவிட்டு விலகுகிறது! முறுமுறுப்பு நம்முடைய கால்களை மரணத்தை நோக்கி இழுக்கும் சரிவு மண்ணைப் போன்றது. நம்முடைய் ஆவிக்குரிய வளர்ச்சியை அது தடுக்கிறது!

பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களைப்போல, பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு பின்னால் வாழும் கர்த்தருடைய பிள்ளைகளான நாமும் முறுமுறுப்பதால் ஆசீர்வாதங்களை இழந்து போகிறோம்.

நாம் எதை நினைக்கிறோமோ அதை வாய் பேசும்! நாம் எதை பேசுகிறோமோ அதையே பெற்றுக் கொள்வோம்! இது கர்த்தரின் தீர்ப்பு!

 

  என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக. (சங்: 19:14)

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

 

 

Leave a comment